'அரிசி பேக்குக்கும், பணத்துக்கும் வாக்குகளை விற்கும் மக்களின் மனநிலையில் மாற்றம் வேண்டும்' - எம்.எஸ்.எஸ்.அமீர் அலி - News View

About Us

About Us

Breaking

Saturday, August 8, 2020

'அரிசி பேக்குக்கும், பணத்துக்கும் வாக்குகளை விற்கும் மக்களின் மனநிலையில் மாற்றம் வேண்டும்' - எம்.எஸ்.எஸ்.அமீர் அலி

முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் ...
எஸ்.எம்.எம்.முர்ஷித்

பணத்துக்கும், அரிசிக்கும் வாக்குகளை வழங்குகின்ற மக்களின் மனநிலையில் மாற்றம் வரவேண்டும், அப்போதுதான் எமது சமுகத்தில் மாற்றம் ஏற்படும் என்று முன்னாள் இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.

தேர்தல் முடிவுகளின் பின்னர் அவரது இல்லத்தில் ஆதரவாளர்கள் மத்தியில் கலந்துரையாடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில், "எதிர்காலத்தில் எமது பிரதேசம் மட்டுமல்ல, மாவட்டம், மாகாணம் என்று அனைத்து இடங்களிலும் மக்களுக்கு பணத்தினையோ அல்லது பொருட்களையோ கொடுத்து மக்களின் வாக்குகளை பெற்றுக்கொள்ளலாம் என்று நினைக்கும் அரசியல்வாதிகளிடம் இருந்து பொதுமக்களை இறைவன் பாதுகாக்க வேண்டும் என்று நாம் அனைவரும் பிரார்த்தனை செய்து கொள்ள வேண்டும். அப்போதுதான் மக்கள் மீதும் பிரதேசம் மீதும் தான் சார்ந்த மாவட்டம் மீதும் அக்கறை கொண்ட தலைவர்களை தெரிவு செய்துகொள்ள முடியும். 

அரிசி பேக்கிற்கும் பணத்திற்கும் தங்களது வாக்குரிமையை விற்பதற்கு எமது சமுகம் பழகிக்கொள்வார்களாக இருந்தால் எதிர்காலத்தில் தேர்தல்களை முன்னெடுப்பதில் பாரிய சவால்களை இந்தச் சமூகம் எதிர்நோக்குவதுடன் அரசியல் ரீதியான எந்த உரிமைகளையும் பெற்றுக்கொள்ள முடியாமல் போய்விடும் என்பதில் எந்தவித மாற்றுக்கருத்திற்குமிடமில்லை.

தேர்தலில் கிடைக்கும் வெற்றி அல்லது தோல்வியை நாம் ஒவ்வொருவரும் தாங்கிக் கொள்ள வேண்டும் அதற்கென்று மன தைரியம் எமக்கு வரவேண்டும் நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் நான் தோற்றுவிட்டேன் என்பதற்காக எமது ஆதரவாளர்கள் கவலைப்படுவதற்கும் எமக்கு எதிராக செயற்பட்டவர்கள் எம்மை தோற்கடித்து விட்டோம் என்பதற்காக சந்தோசப்படும் நேரமும் அல்ல. என்னை தோற்கடித்ததால் அவர்கள் சாதித்தது எதுவுமே இல்லை இது இறைவனின் நாட்டப்படி நடைபெற்றுள்ளது. 

இத்தேர்தலில் நாம் தோற்று விட்டோம் என்று எனது ஆதரவாளர்கள் எவரும் கவலைப்பட வேண்டாம். நீங்கள் ஒவ்வொருவரும் தைரியமாக இருக்க வேண்டும் உங்களது தைரியம்தான் எனது பலமாக அமையும் எதிர்காலத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தை குறிப்பாக கல்குடாவை நான் அனாதையாக விட்டுச் செல்லமாட்டேன். என்னால் எந்தளவுக்கு இந்த சமூகத்திற்கும் சகோதர இன மக்களுக்கும் சேவைகள் செய்ய முடியுமோ அந்தளவுக்கு நான் எனது சேவைகளைச் செய்வேன்" என்றார்.

No comments:

Post a Comment