(இராஜதுரை ஹஷான்)
ராஜபக்ஷர்களின் குடும்ப உறுப்பினர்கள் எவரும் தேசிய பட்டியல் ஊடாக பாராளுமன்றம் வரவில்லை. மக்களாணையை அமோகமாக பெற்று பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள். ஜனநாயக ரீதியாகவே மக்கள் ராஜபக்ஷர்களுக்கு ஆட்சி அதிகாரத்தை வழங்குகிறார்கள். ஆகவே குடும்ப ஆட்சி என எதிர்த்தரப்பினர் சுட்டிக்காட்டுவது தவறு என பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தத்தை முழுமையாக இரத்து செய்து நாட்டுக்கு பொருந்தும் விதத்திலான திருத்தத்தை உருவாக்கவே அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தம் கொண்டு வரப்பட்டது. முரண்பாட்டை தோற்றுவித்துள்ள 19 ஆவது திருத்தத்தில் ஒரு சில விடயங்களை திருத்துவதால் எவ்வித பயனும் ஏற்படாது. 19 ஐ முழுமையாக நீக்கி அதில் குறிப்பிடப்பட்டுள்ள சாதக விடயங்களை புதிய அரசியலமைப்பில் உள்வாங்குவது அவசியமாகும்.
ராஜபக்ஷர்களின் குடும்ப உறுப்பினர்கள் ஆட்சி அதிகாரம் செலுத்துகிறார்கள். ஒரு குடும்பம் ஆட்சியில் இருப்பது சர்வாதிகாரத்தை ஏற்படுத்தும் என எதிர்த்தரப்பினர்கள் குறிப்பிட்டுக் கொள்கிறார்கள். ராஜபக்ஷர்களின் குடும்ப உறுப்பினர்கள் எவரும் இதுவரை காலமும் தேசிய பட்டியல் ஊடாக பாராளுமன்றம் வரவில்லை.
2015ம் ஆண்டு அரசியல் ரீதியில் மக்கள் செய்த தவறை திருத்திக் கொண்டு மீண்டும். ராஜபக்ஷர்களுக்கு அதிகாரத்தை பலமாகவே வழங்கியுள்ளார்கள். ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தலைமையில் சிறந்த அரச நிர்வாகம் முன்னெடுக்கப்படும் என்றார்.
No comments:
Post a Comment