(ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வஸீம்)
நீதிமன்ற தீர்ப்பில் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் பாராளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகரவை பாராளுமன்றத்துக்கு அழைத்துவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆளுங்கட்சி உறுப்பினர்கள் இன்று சபையில் கோரிக்கை விடுத்ததைத் தொடர்ந்து, அவரை உடனடியாக அழைத்துவருமாறு சபாநாயகர் சிறைச்சாலை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
பாராளுமன்றம் இன்று சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தலைமையில் கூடியது. பிரதான நடவடிக்கைகளை தொடர்ந்து ஒழுங்கு பிரச்சினை ஒன்றை முன்வைத்து எழுந்த ஆளுங்கட்சி உறுப்பினர் பிரேமனாத் தொலவத்த, இரத்தினபுரி மாவட்டத்தில் இருந்து ஒரு இலட்சத்துக்கும் அதிக விருப்பு வாக்குகளை பெற்றுக்கொண்டு பாராளுமன்றத்துக்கு தெரிவாகி இருக்கும் பிரேமலால் ஜயசேகர மேன் முறையீட்டு நீதிமன்றத்தினால் குற்றவாளியாக தீர்ப்பளிக்கப்பட்டு சிறையிலடைக்கப்பட்டிருக்கின்றார். குறித்த தீர்ப்பு தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகர மேன் முறையீட்டு செய்திருக்கின்றார். அதனால் அவரை பாராளுமன்றத்துக்கு அழைத்துவருமாறு உத்தரவிட வேண்டும் என்றார்.
இதன்போது எழுந்த ஆளுங்கட்சி உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க, நீதிமன்றத்தினால் குற்றவாளியாக்கப்பட்ட பலர் மேன்முறையீடு செய்ததன் மூலம் பாராளுமன்ற அமர்வுகளில் கலந்துகொள்ள அழைத்துவரப்பட்டிருக்கின்றனர். நானும் அவ்வாறு சிறையில் இருந்து பாராளுமன்றத்துக்கு வந்திருக்கின்றேன் என்றார்.
இதற்கு சபாநாயர் பதிலளிக்கையில், பாராளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகரவின் மேன்முறையீடு எமக்கு கிடைக்கப் பெற்றிருக்கின்றது. அதன் பிரகாரம் அவரை உடனடியாக பாராளுமன்றத்துக்கு அழைத்து வருமாறு சிறைச்சாலை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருக்கின்றேன் என்றார்.
No comments:
Post a Comment