தற்போது நடைபெற்று முடிந்த பாராளுமன்ற தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 76.15 வீதம் வாக்களிப்பு பதிவு செய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலரும் அரசாங்க அதிபருமாகிய திருமதி. கலாமதி பத்மராஜா புதன்கிழமை மாலை (5) ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் கல்குடா தேர்தல் தொகுதியில் 76 வீதமும், மட்டக்களப்பு தேர்தல் தொகுதியில் 78 வீதமும், பட்டிருப்புத் தொகுதியில் 73 வீதமும் வாக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதுவரையும் கல்குடாவில் 89201 வாக்குகளும், மட்டக்களப்பு தேர்தல் தொகுதியில் 144864 வாக்குகளும், பட்டிருப்பில் 68263 வாக்குகளுமாக 302328 வாக்குகளை மக்கள் பதிவு செய்திருந்தார்கள்.
கல்குடாவில் 28301 வாக்குகளும், மட்டக்களப்பு தொகுதியில் 40603 வாக்குகளும், பட்டிருப்பில் 25761 வாக்குகளுமாக மொத்தமாக 94665 வாக்குகளை மக்கள் அளிக்கப்படவில்லை. நடைபெற்ற தேர்தலில் மட்டக்களப்பில் எதுவித அசம்பாவிதங்களோ அல்லது வன்முறைகளோ பதிவு செய்யப்படவில்லை. 105 சாதாரண முறைப்பாடுகளும் பதிவு செய்யப்பட்டது.
கடந்த 2015 பாராளுமன்ற தேர்தலில் 67 வீதம் வாக்களிக்கப்பட்டதுடன் இம்முறை நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் 76.15 வீதமாக அதிகரித்துள்ளது. கொவிட்-19 பிரச்சினைக்கு மத்தியிலும் மட்டக்களப்பு மாவட்ட மக்கள் வாக்களிப்பில் ஆர்வமாக வாக்களித்ததை காணக்கூடியதாகவுள்ளது.
நடைபெற்ற தேர்தல்களுக்கான வாக்குப் பெட்டிகள் தற்போது வாக்கெண்ணும் நிலையத்திற்கு எடுத்து வரப்பட்டு வியாழக்கிழமை காலை 8.00 மணியளவில் வாக்கெண்ணும் பணி ஆரம்பிக்கப்படவுள்ளது.
மட்டக்களப்பு தொகுதிக்கான வாக்கெண்ணும் நிலையமாக மட்டக்களப்பு மகாஜனக் கல்லூரியும், பட்டிருப்பு தொகுதி, கல்குடா தொகுதிக்கான வாக்கெண்ணும் நிலையமாக மட்டக்களப்பு இந்து க்கல்லூரியும் பயன்படுத்தப்படவுள்ளது.
மேலும் இத்தேர்தல் சுமுகமாக இடம்பெற்றுள்ளதாக மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலரும் அரசாங்க அதிபருமாகிய திருமதி. கலாமதி பத்மராஜா தகவல் தெரிவித்தார்.
No comments:
Post a Comment