இலங்கை முஸ்லிம்களின் அறிவுத் துறையின் அடையாளர்களில் ஒன்றை இழந்து விட்டோம் என்று கலாநிதி எம்.ஏ.எம். ஷூக்ரி அவர்களது மறைவையிட்டு வெளியிட்டுள்ள அனுதாபச் செய்தியில் முன்னாள் அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்டப் பாராளுமன்ற அங்கத்தவருமான எம்.எஸ்.எஸ். அமீர் அலி தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, கலாநிதி ஷூக்ரி அவர்கள் துறை போகக் கற்ற ஒரு தனி மனிதனாக வாழ்ந்து முடித்தவரல்லர். அறிவார்ந்த ஒரு சமூகத்தை உருவாக்குவதில் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்து வாழ்ந்தவர். ஆயிரக் கணக்கான மாணாக்கரை உருவாக்கியதில் பெரும் பங்கை வகித்தவர்.
அவரிடம் கற்ற மாணவர்கள் இன்று பல்வேறு துறைகளில் ஈடுபட்டு வருகிறார்கள். பலர் கலாநிதிகளாக உருவாகியிருக்கிறார்கள். நிர்வாகத் துறைகளில் பணி புரிகிறார்கள். மார்க்க அழைப்புப் பணியிலும் ஈடுபட்டு வருகிறார்கள்.
வாழ் நாள் முழுவதும் கற்பித்தல் பணியிலும் எழுத்துப் பணியிலும் ஈடுபட்டு வந்தவர் கலாநிதி ஷூக்ரி அவர்கள். அறிவைப் பெற்றுக் கொள்ளாத ஒரு சமூகம் முன்னேற்றம் அடையாது என்பதில் அசையாத நம்பிக்கை கொண்டு அதற்காகவே காலமெல்லாம் உழைத்து வந்துள்ளார்.
இவ்வாறான ஒருவரை இன்று முஸ்லிம் சமூகம் இழந்து விட்டதால் ஈடு செய்ய முடியாத ஓர் இடைவெளியை ஏற்படுத்தியிருக்கிறது. இலங்கை முஸ்லிம்களின் அறிவுத் துறையின் அடையாளமாக அவர் விளங்கினார்.
அன்னாரை எல்லாம் வல்ல இறைவன் பொருந்திக் கொள்ளப் பிரார்த்திக்கிறேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment