தோட்ட நிர்வாகத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து தோட்டத் தொழிலாளர்கள் போராட்டம்..! - News View

About Us

About Us

Breaking

Wednesday, May 6, 2020

தோட்ட நிர்வாகத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து தோட்டத் தொழிலாளர்கள் போராட்டம்..!

திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மேபீல்ட் தோட்ட தொழிலாளர்கள் 06.05.2020 அன்று கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டனர். 

தோட்ட நிர்வாகத்தால் வழங்கப்பட்ட உறுதிமொழி மீறப்பட்டதாகவும், ஒரே தடவையில் கூடுதல் தொகை அறவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தே இந்த போராட்டம் மேபீல்ட் தோட்ட கொழுந்து மடுவத்திற்கு முன்பாக முன்னெடுக்கப்பட்டது. 

கொரோனா வைரஸ் தாக்கத்தினால் தொழிலாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இவர்களுக்கு சலுகைக் கடன் அடிப்படையில் சில உணவு பொருட்களை வழங்குவதற்கு தோட்ட கம்பனிகள் இணக்கம் தெரிவித்திருந்தன. 

பெருந்தோட்ட மனிதவள நிதியம் உட்பட இன்னும் சில தரப்புகளின் தலையீட்டுடன் மாதம் 3000 ரூபாய் பெறுமதியான உலர், உணவு பொருட்கள் வழங்கப்படும் என்றும், பின்னர் ஜூன், ஜூலை மாதத்திலிருந்து தவனை அடிப்படையில் அக்கொடுப்பனவு அறவிடப்படும் என முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது. 

சலுகை கடன் அடிப்படையில் வழங்கப்படும் உலர் உணவு பொருட்களுக்கான கொடுப்பனவை ஜூன் மாதத்திற்கு பிறகே அறவிடப்படும் என தோட்ட நிர்வாகம் முன்னதாக கூறியிருந்தது. இருந்தாலும் இம்மாதத்திலிருந்தே இக்கொடுப்பனவு அறவிடப்பட்டுள்ளது. இது பெரும் அநீதியாகும். 
1650 ரூபாய்க்கு உலர், உணவு பொருட்கள் வழங்கிவிட்டு ஒரே தடவையில் அறவிடுவது மனிதநேயமற்ற செயல் என போராட்டத்தில் ஈடுப்பட்ட தொழிலாளர்கள் கருத்து வெளியிட்டனர். 

அத்தோடு, கடந்த மாதத்தில் உரிய முறையில் தொழில் வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதனால் மாதம் மூவாயிரம் ரூபாய் சம்பளமும் எடுத்தவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். இத்தகைய சூழ்நிலையில் இக்கொடுப்பனவுக்கான கட்டணம் அறவிடப்பட்டுள்ளமையானது மனிதநேயமற்ற செயலாகும் என தெரிவித்தனர். 

இவ்விடயம் தொடர்பில் மேபீல்ட் அதிகாரியிடம் தொடர்பு கொண்டு வினவிய போது, கட்டணம் அறவிடுவது பற்றி கடந்த மாதம் 28ம் திகதியே தோட்ட தொழிலாளர்களுக்கு அறிவிக்கப்பட்டிருந்தது. அப்பொழுது எவரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. திடீரென நேற்று (05.05.2020) வந்துதான் ஆட்சேபனை தெரிவிக்கின்றனர். 

அதேபோல் 3300 ரூபாய்க்கு பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன. அதற்கான ஆதாரங்களும் என்னிடம் உள்ளன. ஆகவே 1650 ரூபாய்க்குதான் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன என்ற குற்றச்சாட்டு ஏற்றுக்கொள்ள முடியாது. இப்பகுதியில் உள்ள கஷ்டமான குடும்பங்களுக்கு இனிவரும் காலப்பகுதிகளிலும் நிவாரணங்கள் வழங்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார். 

மலையக நிருபர்

No comments:

Post a Comment