இலங்கை இராணுவத்தால் நடாத்திச் செல்லப்படுகின்ற புனானை, கந்தக்காடு மற்றும் டொல்பின் ஹோட்டல் ஆகிய தனிமைப்படுத்தல் நிலையங்களில் தனிமைப்படுத்தப்பட்ட 127 பேர் இன்றையதினம் (06) வீடு திரும்பியுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்தார்.
கொவிட்-19 எதிர்பாரா பரவலை கட்டுப்படுத்தும் தேசிய செயற்பாட்டு மையத்தில் வைத்து ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அதற்கமைய, டொல்பின் ஹோட்டலிலிருந்து 77 பேர், புனானையிலிருந்து 23 பேர், கந்தக்காட்டிலிருந்து 27 பேர் என PCR பரிசோதனைகளின் பின்னர் 127 பேர் வீடு திரும்பியுள்ளனர்.
முப்படையினரால் மேற்கொள்ளப்பட்டு வரும் தனிமைப்படுத்தல் நிலையங்களிலிருந்து 5,188 பேர் தனிமைப்படுத்தலை நிறைவு செய்து வீடு திரும்பியுள்ளதாக தெரிவித்த, இராணுவத் தளபதி தற்போது வரை 39 தனிமைப்படுத்தல் நிலையங்களில் 4,819 பேர் தனிமைப்படுத்தப்பட்டு வருவதாக சுட்டிக் காட்டினார்.
நேற்று (06) முற்பகல் வரை கடற்படையைச் சேர்ந்த 342 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், கடற்படையினர் அனைவரும் தங்களது முகாமிற்கு திரும்பியுள்ளதால், ஏப்ரல் 30ஆம் திகதிக்கு பின்னர் கடற்படை முகாமிற்கு வெளியிலிருந்து எந்தவொரு கடற்படையினரும் அடையாளம் காணப்படவில்லை என அவர் தெரிவித்தார்.
இன்று (07) முதல் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படுவதால், கடந்த வருடங்களைப் போன்று வெசாக் கொண்டாட்டங்களில் ஈடுபட வாய்ப்பில்லை என தெரிவித்த, இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா, இம்முறை புத்தாண்டை வீட்டிலிருந்து கொண்டாடியது போன்று, தனிமைப்படுத்தல் விதிமுறைகளுக்கு அமைய, சுகாதார நடைமுறைகளைப் பேணி, சமய அனுஷ்டானங்களை, சமய கொள்கைகளைப் பேணுவதன் மூலம் வீடுகளிலிந்து ஈடுபடுமாறு வேண்டுகோள் விடுத்தார்.
No comments:
Post a Comment