இரத்தினபுரி, கேகாலை ஆகிய மாவட்டங்களில் அடிக்கடி ஏற்படும் வெள்ளம் மற்றும் மண்சரிவு அனர்த்தத்தை கவனத்திற் கொண்டு மக்களை அதிலிருந்து பாதுகாப்பதற்காக இரத்தினபுரி நகரை மையமாக கொண்டு கடற்படை முகாம் ஒன்றை அமைப்பதற்கு தீர்மானித்துள்ளதாக சப்ரகமுவ மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ தெரிவித்தார்.
இரத்தினபுரி மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் ஒருக்கிணைப்புக் குழுக் கூட்டம் இரத்தினபுரி மாவட்ட செயலகத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றபோது அதில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், இரத்தினபுரி மாவட்ட மக்கள் அடிக்கடி அனர்த்தங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர். இதை கருத்திற் கொண்டு இரத்தினபுரி நகரில் கடற்படை முகாம் ஒன்றை அமைப்பதற்கு ஜனாதிபதி மற்றும் பாதுகாப்புச் செயலாளர் ஆகியோரின் கவனத்திற்கு கொண்டுவர உள்ளேன்.
இரத்தினபுரி மாவட்டத்தில் வெள்ளம் மற்றும் மண்சரிவு ஏற்படும்போது மக்களை பாதுகாப்பதற்காக கடற் படையினர் பாரிய சேவைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
எனவே, கடற்படையினரின் சேவையை மேலும் ஊக்குவித்து மக்ளுக்கு அவசர சேவைகளை பெற்று கொடுப்பதற்காக இரத்தினபுரி நகரில் கடற்படை முகாம் ஒன்று அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சப்ரகமுவ மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ மேலும் தெரிவித்தார்.
காவத்தை விசேட நிருபர்
No comments:
Post a Comment