மலேரியாவை கட்டுப்படுத்தும் மருந்துகளை அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்வதற்கான தடையை இந்தியா நீக்காவிட்டால் பதிலடி கொடுக்கப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மலேரியாவினை கட்டுப்படுத்துவதற்காக பயன்படுத்தப்படும் ஹைட்ராக்சி குளோரோகுயின் மருந்தினை அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்வதற்கான தடைகளை தளர்த்த வேண்டும் என இந்திய பிரதமரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளதாக டிரம்ப் தெரிவித்துள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை இந்திய பிரதமரை தொலைபேசியில் தொடர்புகொண்டு இந்த வேண்டுகோளை விடுத்துள்ளதாக டிரமப் தெரிவித்துள்ளார்.
எங்களுக்கு அந்த மருந்து கிடைப்பதற்கு நீங்கள் அனுமதித்தால் அதனை நான் பாராட்டுவேன் என தெரிவித்தேன் என டிரம்ப் குறிப்பிட்டுள்ளார். ஆனால் அவர் அதற்கு அனுமதி வழங்கவில்லை, என்றால் பரவாயில்லை ஆனால் நிச்சயம் பதில் நடவடிக்கையிருக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.
மலேரியா தடுப்பு மருந்தினால் கொரோனா வைரசினை கட்டுப்படுத்த முடியுமா என்பது பரிசோதனைகளின் மூலம் உறுதியாகாத போதிலும் டிரம்ப் அந்த மருந்து தற்போதைய நிலையை மாற்றும் என தெரிவித்து வருகின்றார்.
இந்தியா மருந்துகளை ஏற்றுமதி செய்வதற்கு தடை விதித்துள்ளமைக்காக அமெரிக்க பொருளாதார தடை விதிக்குமா என்ற கேள்விக்கு டிரம்ப், இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் நல்லுறவு உள்ளதால் மோடி அப்படி தடைகளை விதிக்கமாட்டார், விதித்தால் நான் ஆச்சரியமடைவேன் என தெரிவித்துள்ளார்.
மோடி மருந்தினை ஏற்றுமதி செய்வதற்கு தடை விதிப்பதை நான் விரும்பவில்லை, அவர் அவ்வாறானா முடிவை எடுத்துள்ளார் என நான் கேள்விப்படவில்லை, பல வருடங்களாக அவர்கள் அமெரிக்க வர்த்தகத்தினால் பயன் அடைந்துள்ளனர், எனவும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment