அக்கரைப்பற்றில் தனிமைப்படுத்தப்பட்ட 75 பேர் வீடு திரும்பினர் - அடையாளம் காணப்பட்ட இரு கொரோனா தொற்றாளர்களும் குணமடைவு - News View

About Us

About Us

Breaking

Wednesday, April 29, 2020

அக்கரைப்பற்றில் தனிமைப்படுத்தப்பட்ட 75 பேர் வீடு திரும்பினர் - அடையாளம் காணப்பட்ட இரு கொரோனா தொற்றாளர்களும் குணமடைவு

அம்பாறை மாவட்டத்தின் அக்கரைப்பற்றில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர் என அடையாளம் காணப்பட்ட நபர்களுடன் நேரடி மற்றும் இரண்டாம் நிலை தொடர்புகளைப் பேணியவர்கள் என இனங்காணப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டிருந்த 75 பேர் தமது தனிமைப்படுத்தல் காலத்தினை நிறைவு செய்து நேற்று (28) தத்தமது வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் கொரோனா தொற்றுக்கு இலக்கானவர் என அடையாளம் காணப்பட்டு சுகம் பெற்ற ஒருவரும் தமது வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் ஜீ. சுகுணன் தெரிவித்தார்.

இவ்வாறு தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருந்து வீடு திரும்பியவர்களுள் அம்பாறை மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்கு இலக்கான இரண்டாவது நபர் என அடையாளம் காணப்பட்ட பெண் ஒருவரும் அடங்குகின்றார். 
இதனால் அம்பாறை மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்கு இலக்கானவர்கள் என அடையாளப்படுத்தப்பட்ட இருவரும் பூரண சுகம் பெற்று தமது இல்லங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

நேற்றைய தினம் சுகம் பெற்று வீடு திரும்பிய குறித்த பெண் அம்பாறை மாவட்டம், அக்கரைப்பற்று பிரதேசத்தில் கொரோனா தொற்றுக்கு இலக்கானவர் என அடையாளப்படுத்தப்பட்ட முதலாவது நபரின் மனைவியாவார். 

இவர் வெலிக்கந்தை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனைகளின் அறிக்கைகள் கிடைக்கப் பெற்றதனைத் தொடர்ந்து இவரது மருத்துவ அறிக்கை நெகடிவ் என வெளியிடப்பட்டதனால் இவர் சுகம் பெற்ற வகைப்படுத்தலின் கீழ் தனது வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
இவ்வாறு அனுப்பி வைக்கப்பட்டுள்ள இந்நபரும் ஏனைய தனிமைப்படுத்தல் காலத்தினை நிறைவு செய்த 75 பேரும் கொரோனா தொற்று நோய் தடுப்பு செயற்பாட்டிற்கு அமைவாக ஏப்ரல் 28 முதல் மே 11 ஆம் திகதி வரை 14 நாட்கள் கட்டாய தனிமைப்படுத்தலுக்கு உட்பட வேண்டுமென அக்கரைப்பற்று சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தினால் சிவப்பு அறிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இம்மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கானவர்கள் என அடையாளப்படுத்தப்பட்ட இருவருடன் நேரடி மற்றும் இரண்டாம் நிலை தொடர்புகளைப் பேணியவர்கள் என இனங்காணப்பட்டு பொலன்னறுவை தமின்ன தனிமைப்படுத்தல் நிலையத்தில், தனிமைப்படுத்தப்பட்டிருந்த 85 பேரில் 75 பேர் தமது வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுள் சிறிய குழந்தையொன்றும் அடங்குகின்றது.

கொரோனா தொற்றுக்கு இலக்கானவர்கள் என இனங்காணப்பட்ட இருவரின் நேரடித் தொடர்பினைப் பேணி வந்தவர்கள் பத்து பேர் இன்னும் தம்மின்ன தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருந்து வருகின்றனர்.
வீடு திரும்பியவர்களின் மாதிரிகள் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட போது அவ் அறிக்கைகள் தொற்று இல்லை என, நெகடிவாக கிடைக்கப் பெற்றதனால் இவர்கள் கொரோனா தொற்றற்றவர்கள் என வகைப்படுத்தப்பட்டு தனிமைப்படுத்தல் காலத்தினை பூர்த்தி செய்து தமது வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். 

இவர்கள் இம்மாதம் 12 ஆம் திகதி பொலன்னறுவை இராணுவத்தினரால் பாமரிக்கப்பட்டு வரும் தம்மின்ன தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு அனுப்பப்பட்டவர்கள் என கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் ஜீ.சுகுணன் மேலும் தெரிவித்தார்.

இவ்வாறு இவர்களை ஏற்றிச் சென்ற இரண்டு பஸ் வண்டிகளுக்கும் அம்புலன்ஸ் வண்டியொன்றுக்கும் இவர்கள் வசித்து வரும் பிரதேசங்களும் சுகாதாரத் துறையினரால் நேற்றைய தினம் தொற்று நீக்கல் மருந்துகள் தெளிக்கப்பட்டன.
அம்பாறை மாவட்டத்தில் கொவிட்-19 தொற்றுக்கு இலக்கானவர் என அடையாளம் காணப்பட்ட முதலாவது நபர் அக்கரைப்பற்று பிரதேசத்தினைச் சேர்ந்தவர். இவர் கட்டார் நாட்டுக்கு சென்று கடந்த மாதம் 16 ஆம் திகதி நாடு திரும்பியிருந்தார்.

இவரது மாதிரிகள் இம்மாதம் 6 ஆம் திகதி கண்டி போதனா வைத்தியசாலைக்கு பரிசோதனை ஆய்விற்காக அனுப்பப்பட்டது. இதற்கமைவாக அவரது மருத்துவ அறிக்கை இம்மாதம் எட்டாம் திகதி சுகாதார தரப்பினருக்கு கிடைக்கப் பெற்றிருந்தது. 

இதன் பிரகாரம் குறித்த நபருக்கு கொவிட் 19 தொற்று உள்ளதென அடையாளம் காணப்பட்டு வெலிகந்தை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த சனிக்கிழமை இவர் சுகம் பெற்று வீடு திரும்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

குறித்த இந்நபர்கள் வசித்து வரும் பிரதேசங்களில் கிருமித் தொற்று நீக்கும் செயற்றிட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

(அட்டாளைச்சேனை நிருபர் - எம்.ஏ. றமீஸ்)

No comments:

Post a Comment