நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து தபால் அலுவலகங்களும் மே மாதம் 04ஆம் திகதி முதல் வழமை போன்று இயங்குமென, தபால் மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில், அரசாங்கம் எடுத்த நடவடிக்கைளுக்கு அமைய, தற்போது தபால் சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
எவ்வாறாயினும், வழமையான சேவைகளுக்காக அனைத்து தபால் அலுவலகங்களும் மே 04ஆம் திகதி முதல் திறக்கப்படுமெனவும், அவர் தெரிவித்துள்ளார்.
இதன்போது பொதுமக்களுக்கான மாதாந்த உதவிக் கொடுப்பனவு, சிரேஷ்ட பிரஜைகள் கொடுப்பனவு, விவசாய ஓய்வூதியக் கொடுப்பனவு, மற்றும் ஓய்வூதியக் கொடுப்பனவு ஆகியன தபால் அலுவலகங்கள் ஊடாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அத்தோடு மின்சார பட்டியல், நீர் பட்டியல், தொலைபேசி பட்டியல்களை செலுத்தவும் இலத்திரனியல் பணப் பரிமாற்றங்களை செய்ய முடியும். அத்தோடு உள்ளூர் மற்றும் வெளிநாட்டுக் கடிதங்கள், பொதிகளை கையளிக்க முடியுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தபால் சேவைகளை பெறுவதற்காக தபால் நிலையங்களுக்கு வருபவர்கள் சுகாதாரத் துறையினரால் வழங்கப்பட்டுள்ள சுகாதார ஆலோசனைகளை கடைப்பிடித்து நடப்பார்களென்று நம்புவதோடு, தபாலக அலுவலர்களின் ஆலோசனைகளுக்கு அமைய நடந்து கொள்வார்கள் என எதிர்பார்ப்பதாகவும் தபால் மா அதிபர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment