கொரோனா வைரஸ் அச்சத்தினால் உலக நாடுகள் முன்னெடுத்துள்ள நடவடிக்கைகள் காரணமாக சர்வதேச அளவில் உணவு தட்டுப்பாடு ஏற்படலாம் என ஐ.நா எச்சரிக்கை விடுத்துள்ளது.
கொரோனா வைரஸ் காரணமாக விவசாய தொழிலாளர்களுக்கு ஏற்பட்டுள்ள பற்றாக்குறை மற்றும் அரசாங்கங்கள் விதித்துள்ள வரிகள் ஏற்றுமதிக்கான தடைகள் காரணமாக எதிர்வரும் வாரங்களில் உணவுத் தட்டுப்பாடு ஏற்படலாம் என ஐ.நாவின் உணவு மற்றும் விவசாய ஸ்தாபனத்தின் தலைமை பொருளியலாளர் மக்சிமோ டொரேரோ தெரிவித்துள்ளார்.
அரசாங்கங்கள் உணவுப் பொருட்கள் தொடர்பான கட்டுப்பாடுகளை விதித்தால் மோசமான விடயங்கள் நிகழக்கூடும் என தெரிவித்துள்ள அவர் சுதந்திர வர்த்தகத்திற்கு எதிரான அனைத்து நடவடிக்கைகளும் எதிர்மறையானதாக அமையும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது தடைகளுக்கான நேரமில்லை என குறிப்பிட்டுள்ள அவர் வர்த்தக தடைகளுக்குமான நேரம் இதுவல்ல இது சர்வதேச அளவில் உணவு விநியோகத்தை பாதுகாப்பதற்கான தருணம் என குறிப்பிட்டுள்ளார்.
ஏற்றுமதிகளை கட்டுப்படுத்துமாறு விடுக்கப்படும் வேண்டுகோளுக்கு அரசாங்கங்கள் செவிமடுக்க கூடாது என உணவு மற்றும் விவசாய ஸ்தாபனத்தின் தலைமை பொருளியலாளர் மக்சிமோ டொரேரோ தெரிவித்துள்ளார்.
உலகில் கோதுமை மாவை ஏற்றுமதி செய்யும் முக்கிய நாடுகளில் ஒன்றான கஜகஸ்தான் ஏற்றுமதியை நிறுத்தியுள்ளது, உலகில் அதிக அளவு அரிசியை ஏற்றுமதி செய்யும் மூன்றாவது நாடான வியட்நாம் தனது ஏற்றுமதியை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது, உலகில் கோதுமையை அதிகளவு ஏற்றுமதி செய்யும் நாடான ரஸ்யாவும் தடைகள் குறித்து எச்சரித்துள்ளது.
இந்தநிலையில் வர்த்தக தடைகள் மிகமோசமான நெருக்கடியை ஏற்படுத்தலாம் என உணவு மற்றும் விவசாய ஸ்தாபனத்தின் தலைமை பொருளியலாளர் மக்சிமோ டொரேரோ தெரிவித்துள்ளார்.
உணவுப் பொருட்கள் தொடர்பான நெருக்கடி அடுத்த சில வாரங்களில் ஆரம்பித்து அடுத்த சில மாதங்களில் தீவிரமடையும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment