இரத்ததானம் அளிக்க முன்வாருங்கள் ! - தேசிய இரத்த வங்கி அழைப்பு ! - News View

About Us

About Us

Breaking

Monday, March 23, 2020

இரத்ததானம் அளிக்க முன்வாருங்கள் ! - தேசிய இரத்த வங்கி அழைப்பு !

(நா.தனுஜா) 

நாட்டின் தற்போதைய நெருக்கடி மிக்க சூழ்நிலையின் காரணமாக தேசிய இரத்த வங்கியில் குருதி இருப்பில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ள காரணத்தினால், குருதிக் கொடையாளர்கள் தானமளிக்க முன்வருமாறு தேசிய இரத்த வங்கி அழைப்பு விடுத்துள்ளது. 

இது குறித்து தேசிய இரத்த வங்கி விடுத்துள்ள அறிவித்தலில் கூறப்பட்டிருப்பதாவது நாட்டில் வேகமாகப் பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக, தேசிய இரத்த வங்கியின் குருதி இருப்பில் வீழ்ச்சியேற்பட்டு வருகிறது.

குருதி என்பது வேறு எவ்வித மாற்றீடையும் கொண்டிராத அதேவேளை, மிகவும் அத்தியாவசியமானதாகவும் காணப்படுகின்றது.

எனவே தற்போது உயிர்களைக் காப்பதற்கு உங்களனைவரினதும் ஒத்துழைப்பு அவசியமாகிறது. நாட்டின் தற்போதைய நிலையைக் கருத்திற்கொண்டு ஒரேநேரத்தில் பெரும் எண்ணிக்கையானோர் இரத்ததானம் செய்வதற்கு ஒன்றுகூடுவதைத் தவிர்க்க வேண்டிய தேவையேற்பட்டுள்ளது.

எனவே இரத்ததானம் வழங்க விரும்புபவர்கள் நாரஹென்பிட்டியில் உள்ள தேசிய இரத்த வங்கிக்கு 011 5332153, 011 5332154 என்ற இலக்கங்களின் மூலம் தொடர்பினை ஏற்படுத்தி முன்பதிவு செய்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

அதேபோன்று நீங்கள் கடந்த ஒரு மாத காலத்திற்குள்ளாக காய்ச்சல், இருமல், சுவாசக்கோளாறு ஆகியவற்றினால் பாதிக்கப்பட்டிருப்பின் கடந்த ஒரு மாத காலத்திற்குள்ளாக வெளிநாட்டிலிருந்து வருகை தந்தவர்கள் உங்களது வீட்டில் தங்கியிருப்பின் அல்லது அவர்களுடன் நீங்கள் நெருக்கமான தொடர்புகளைப் பேணியிருப்பின் தற்போது உங்களது வீட்டில் காய்ச்சல், இருமல், சுவாசக்கோளாறு போன்றவற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் இருப்பின், நீங்கள் கடந்த மூன்று மாத காலப்பகுதிக்குள் வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொண்டிருப்பின் இரத்தம் வழங்குவதைத் தவிர்த்துக் கொள்ளுங்கள்.

No comments:

Post a Comment