கல்வியமைச்சிற்கு முன்னால் சட்டவிரோதமாக தங்கியிருந்த இரு தேரர் மாணவர்கள் உள்ளிட்ட 22 பேருக்கு விளக்கமறியல் நீடிப்பு - News View

About Us

About Us

Breaking

Monday, March 2, 2020

கல்வியமைச்சிற்கு முன்னால் சட்டவிரோதமாக தங்கியிருந்த இரு தேரர் மாணவர்கள் உள்ளிட்ட 22 பேருக்கு விளக்கமறியல் நீடிப்பு

கல்வியமைச்சிற்கு முன்னால் சட்டவிரோதமாக தங்கியிருந்த இரு தேரர் மாணவர்கள் உள்ளிட்ட 22 பேருக்கும் எதிர்வரும் 16ஆம் திகதி வரை விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

நேற்று ஞாயிற்றுக்கிழமை (01) காலை 7.00 மணியளவில், இவர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.

கொழும்பு கறுவாத்தோட்டம் பகுதியிலுள்ள கல்வியமைச்சிற்கு முன்னால், பிரதான வீதி, பாதசாரிகள் நடைபாதை மற்றும் அமைச்சின் பிரதான நுழைவாயில் ஆகியவற்றை மூடும் வகையில் கொட்டகை அமைத்து, சட்ட விரோதமாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த பல்கலைக்கழக மாணவர்களே இவ்வாறு கைது செய்யபட்டிருந்தனர்.

இவர்களுக்கு இன்றையதினம் (01) வரை விளக்கமறியல் விதிக்கப்பட்ட நிலையில், இன்றைய தினம், புதுக்கடை நீதவான் நீதிமன்றில் அவர்கள் முன்னிலைப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து அவர்களுக்கு எதிர்வரும் 16ஆம் திகதி வரை விளக்கமறியல் விதிக்கப்பட்டுள்ளது.

பகிடிவதை உள்ளிட்ட பல்வேறு சம்பவங்களின் அடிப்படையில் ருஹுணு பல்கலைக்கழக மாணவர் சங்கத் தலைவர் உள்ளிட்டோருக்கு வழங்கப்பட்ட தடையுத்தரவை அகற்றுமாறு கோரி இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதேவேளை, களனி பல்கலைக்கழக வளாகத்தில் CCTV களை கழற்றிய சம்பவம் தொடர்பில், பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் 25 பேருக்கு 2 வருட வகுப்புத் தடை விதிக்கப்பட்டதோடு, இச்சம்பவம் தொடர்பில் கைதான களனி பல்கலைக்கழக மாணவர் பேரவையின் தலைவர் கொபெய்துடுவே சமித தேரர் உள்ளிட்ட 4 மாணவர்களும், கடந்த வெள்ளிக்கிழமை (28) மஹர நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து அவர்களுக்கு மார்ச் 03ஆம் திகதி வரை விளக்கமறியல் விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment