ஊரடங்கு சட்ட நேரத்தில் சட்டவிரோதமான முறையில் மதுபானங்களை விற்பனை செய்த மதுபான விற்பனை நிலையம் ஒன்று திருகோணமலை தலைமையக பொலிசாரால் முற்றுகையிடப்பட்டதோடு, சந்தேகநபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று (23) திருகோணமலை தலைமையக பொலிசாரால் குறித்த மதுபான விற்பனை நிலையம் முற்றுகையிடப்பட்டதோடு, இதன்போது 200 இற்கும் அதிக மதுபான போத்தல்களும் ரூபா 200,000 பணமும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
ஊரடங்கு சட்டம் நாட்டில் அமுலில் இருக்கின்ற மற்றும் தளர்த்தப்படும் சந்தர்ப்பங்களில் மதுபான சாலைகளை மூடுமாறு அரசினால் அறிவுறுத்தப்பட்டிருந்தது.
அவ்வாறிருக்க சட்டவிரோதமான முறையில் மதுபான விற்பனை நிலையத்தை திறந்து, அதிக விலைக்கு மதுபானங்களை விற்பனை செய்த குறித்த மதுபானசாலையினை திருகோணமலை தலைமையக பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற இரகசிய தகவலை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிசார் விற்பனைக்காக அங்கு வைக்கப்பட்டிருந்த மதுபான போத்தல்களை கையகப்படுத்தியதோடு அங்கிருந்த ஒருவரையும் கைது செய்துள்ளனர்.
சந்தேக நபரை தடுத்து வைத்துள்ளதோடு திருகோணமலை நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்த உள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
(எப். முபாரக்)
No comments:
Post a Comment