இலங்கையில் சீனாவின் தூதுவராக கடமையாற்றக் கிடைத்தமை, தனக்கு கிடைத்த கௌரவமாகும் என சீன தூதுவர் செங்க்சியுஆன் குறிப்பிட்டார். தனது பதவிக்காலம் நிறைவடைந்து இலங்கையில் இருந்து விடைபெற்றுச் செல்லும் முன் நேற்று (27) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களை சந்தித்த தூதுவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இலங்கையில் தனது பதவிக்காலத்தில் மறக்க முடியாத பல நினைவுகள் காணப்படுவதாக குறிப்பிட்ட தூதுவர், தனது புதிய பதவியிலும் இலங்கைக்கு தன்னாலான அனைத்து வித உதவிகளையும் செய்வதாக குறிப்பிட்டார்.
கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட சீனாவுக்கு வழங்கிய ஆதரவுக்காக இலங்கை அரசுக்கும் மக்களுக்கும் செங்க்சியுஆன் அவர்கள் நன்றி தெரிவித்தார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் சீனாவுக்கு அன்பளிப்புச் செய்த கறுப்புத் தேயிலைத் தொகுதிக்கும், நாடு பூராகவும் நடைபெற்ற ஆசிர்வாதப் பூஜைகளுக்காகவும் தூதுவர் தனது நன்றியைத் தெரிவித்தார்.
வைரஸ் தொற்று உடனடியாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் புதிதாக பாதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை பாரியளவில் குறைந்துள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
தூதுவருக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்த ஜனாதிபதி அவர்கள், எதிர்வரும் காலங்களிலும் இலங்கைக்கு உதவிகளை செய்யுமாறும் கேட்டுக்கொண்டார்.
கொழும்பு - இரத்தினபுரி அதிவேகப்பாதை, சூரிய மற்றும் காற்று விசையினால் தொழிற்படும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் கொண்ட சக்தி வலுத்திட்டம் மற்றும் கிராம மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துதல் தொடர்பாக ஜனாதிபதி அவர்கள் தூதுவருக்கு தெளிவுபடுத்தினார்.
கொழும்பு துறைமுக நகரின் முதலீட்டாளர்களுக்கு விசேட வசதிகளை செய்து கொடுப்பதாகவும் ஜனாதிபதி அவர்கள் மேலும் குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment