குடிநீரை தொடர்ச்சியாக வழங்க முடியாத நிலை ஏற்படலாம் என, தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.
நிலவும் வரட்சியான காலநிலை காரணமாக நீர் வழங்கலை மட்டுப்படுத்தப்பட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக சபை சுட்டிக்காட்டியுள்ளது.
நாட்டில் தற்போது நிலவும் வரட்சியான காலநிலை காரணமாக இதுவரை 28,454 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
தற்போது நிலவும் மழையின்றி வானிலை எதிர்வரும் மார்ச் 02 ஆம் திகதி வரை தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
தற்போது, கொத்மலை நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் 51.6 சதவீதமாக உள்ளதோடு, போவதென்ன நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் 36 சதவீதமாகவும், கலாவெவவின் நீர்மட்டம் 55 சதவீதமாகவும் குறைந்துள்ளது.
ஆயினும், பராக்ரம சமுத்திரா, கவுடுல்ல, மின்னேரியா, கந்தளாய், மாதுரு ஓயா நீர்த்தேக்கங்களின் நீர் நிலைகளில் உயர் மட்டத்தில் நீர் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, களனி கங்கையை சுத்தப்படுத்தி மண் அகழும் (தூர் வாரும்) நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதால், கடல் மட்டத்திலும் பார்க்க அம்பத்தலை மற்றும் கடுவல பிரதேசங்களில் நீர் மட்டம் குறைவடைந்துள்ளதால் கொழும்புக்கு விநியோகிக்கப்படும் நீரில் உப்பு மாசுபடுவதற்கான ஆபத்து அதிகரிக்கக்கூடும் என, களனி கங்கை நீர் நிலையை பாதுகாக்கும் மக்கள் அமைப்பினால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment