புதுடில்லியில் வன்முறை கும்பல் முஸ்லீம்களின் வீடுகளை தீக்கிரையாக்கிய வேளை வீட்டிற்குள் சிக்குண்டு வெளியேற முடியாத நிலையில் 85 வயது முஸ்லீம் பெண்ணொருவர் உயிரிழந்தமை குறித்த செய்திகள் வெளியாகியுள்ளன.
ஞாயிற்றுக்கிழமை முதல் இடம்பெற்ற வன்முறைகளில் 30 ற்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ள நிலையிலேயே இந்த உயிரிழப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
வன்முறை கும்பல் தனது வீட்டை கொழுத்திய வேளை தனது பிள்ளைகளும் தனது 85 வயது தாயாரும் உள்ளே சிக்கிக் கொண்டனர் என சயீட் சல்மானி என்பவர் இந்திய ஊடகங்களிற்கு தெரிவித்துள்ளார்.
பதினொரு மணியளவில் பிள்ளைகள் வீட்டில் பால் இல்லை என தெரிவித்தனர், நான் வெளியே சென்று பால் வாங்கி வரும் வேளை எனது மகன் என்னை அழைத்து சுமார் 200 பேர் கொண்ட குழுவினர் வீட்டை நெருங்கிக் கொண்டிருக்கின்றனர் என தெரிவித்தார் என சயீட் சல்மானி குறிப்பிட்டுள்ளார்.
அவர்கள் இந்துக்களா முஸ்லீம்களா என்பது தெரியவில்லை பிள்ளைகள் வீட்டின் கதவை பூட்டி விட்டனர் என அவர் குறிப்பிட்டுள்ளார். எனது 15 வயது முதல் 20 வயதான நான்கு பிள்ளைகளும் வீட்டிற்குள் இருந்தனர் அவர்களில் இருவர் பெண்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனது தாயார் மேல் மாடியிலிருந்தார் அவர் அங்கு சிக்குண்டுள்ளார், நான் உள்ளே செல்ல முயன்ற வேளை என்னையும் கொலை செய்து விடுவார்கள் என அங்கிருந்தவர்கள் தெரிவித்தனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனது பிள்ளைகள் அப்பா வந்து எங்களை காப்பாற்றுங்கள் என அலறிக் கொண்டிருந்தனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார். உள்ளே சிக்குண்ட எனது அம்மா மூச்சுத்திணறி இறந்துள்ளார், கையில் எரிகாயங்கள் காணப்பட்டன. பிள்ளைகள் தப்பி விட்டனர் என சயீட் சல்மானி தெரிவித்துள்ளார்.
எனது சிறிய ஆடைதொழிற்சாலையிலிருந்து கீழ் தளத்திற்கு தீ வைத்த பின்னர் ஒவ்வொரு மாடியாக சென்று தீமூட்டியுள்ளனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனது தாயாரின் உடல் பத்து மணித்தியாலங்களிற்கு மேல் உள்ளேயிருந்தது தீயணைப்பு படைவீரர்களே அவற்றை மீட்டனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார். எனது தாயார் உதவிக்காக அலறியிருப்பார் எவராலும் அவரை காப்பாற்ற முடியவில்லை என சயீட் சல்மானி தெரிவித்துள்ளார்.
இதனை முஸ்லீம்கள் இந்துக்கள் தொடர்பான விடயமாக கருத வேண்டாம், நான் பல இந்துக்களுடன் பணியாற்றியிருக்கின்றேன், அவர்கள் அமைதியை விரும்புபவர்கள் நான் எனது தாயார் எனது தொழிற்சாலை வீடு அனைத்தையும் இழந்துவிட்டேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment