தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தனது பதவியிலிருந்து ஓய்வு பெற எண்ணுவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு அறிவித்துள்ளார்.
இது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய, சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கு அறிவித்துள்ளதாக, சபாநாயகரின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
சபாநாயகர் அலுவலகத்தினால் விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. அரசியலமைப்பு பேரவையின் தலைவர் என்ற வகையில் சபாநாயகர் இந்த கோரிக்கை தொடர்பில் பதிலளித்துள்ளார்.
இந்த சந்தர்ப்பத்தில் மஹிந்த தேசப்பிரிய பதவியிலிருந்து விலகாது, தமது பதவிக்காலத்தை முழுமையாக பயன்படுத்தி சேவையாற்றுவது சிறந்தது என சபாநாயகர் கூறியுள்ளார்.
விசேடமாக கடந்த ஜனாதிபதி தேர்தல் காலப்பகுதியில் மஹிந்த தேசப்பிரியவின் தலைமையிலான தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் செயற்பாடுகளுக்கு சபாநாயகர் இதன்போது வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தேர்தலூடாக அடையாளங்காணப்பட்ட முக்கிய மறுசீரமைப்புகள் மற்றும் எதிர்காலத்தில் இடம்பெறவுள்ள தீர்மானமிகு தேர்தல் ஆகியவற்றை சிப்பாக வழிநடத்துவதற்கு மஹிந்த தேசப்பிரியவின் தலைமைத்துவம் அவசியம் எனவும் சபாநாயகர் குறிப்பிட்டுள்ளார்.
அரசியலமைப்பு சபையினால் நியமிக்கப்பட்ட தேசிய சுதந்திர ஆணைக்குழுக்களின் தலைவர்கள் தாங்கள் ஓய்வு பெற விரும்பும் நிலையில், அச்சபைக்கு அறிவிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment