பணச் சூதாட்டத்தை ஒழுங்குபடுத்த அதிகார சபை : சட்டமூலத்துக்கு அரச நிதி பற்றிய குழு அனுமதி - ரஊப் ஹக்கீம் தலைமையில் தீர்மானம் - News View

About Us

About Us

Breaking

Thursday, August 14, 2025

பணச் சூதாட்டத்தை ஒழுங்குபடுத்த அதிகார சபை : சட்டமூலத்துக்கு அரச நிதி பற்றிய குழு அனுமதி - ரஊப் ஹக்கீம் தலைமையில் தீர்மானம்

பணச் சூதாட்டத்தை ஒழுங்குபடுத்தும் அதிகார சபைச் சட்டமூலத்துக்கு அரசாங்க நிதி பற்றிய குழுவின் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அரசாங்க நிதி பற்றிய குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் (கலாநிதி) ஹர்ஷ டி சில்வா வெளிநாடு சென்றுள்ளதால் அந்தக் குழுவின் தற்காலிக தலைவராக நியமிக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் (சட்டத்தரணி) ரவூப் ஹகீம் தலைமையில் 2025.08.12 ஆம் திகதி அந்தக் குழு கூடியபோதே இந்த சட்டமூலத்துக்கான அனுமதி வழங்கப்பட்டது.

இந்த சட்டமூலம் தொடர்பில் பல்வேறு சந்தர்ப்பங்களில் அரசாங்க நிதி பற்றிய குழுவில் கலந்துரையாடப்பட்டதுடன், இதன் மூலம் இலங்கையில் பந்தயம் பிடித்தல் மற்றும் பணச்சூதாட்ட நிறுவனங்களை தரநிலைப்படுத்தல், சமூகத் தீங்குகளைக் குறைத்தல், சுற்றுலாத்துறையை அபிவிருத்தி செய்தல் மற்றும் பொருளாதாரத்தை வளர்ச்சியடையச்செய்தல் தொடர்பில் விரிவான அல்லது முழுமையான விடயப்பொறுப்பைக் கொண்ட சுயாதீனமான ஒழுங்குபடுத்தும் நிறுவனமாக பணச்சூதாட்டத்தை ஒழுங்குபடுத்தும் அதிகாரசபையை ஸ்தாபிப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்படும்.

அத்துடன், 2025.04.28 ஆம் திகதிய 2434/02 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானியில் வெளியிடப்பட்ட இறக்குமதித் தீர்வைகள் தொடர்பான சுங்கக் கட்டளை சட்டம் (அத்தியாயம் 235) 10 ஆவது பிரிவின் கீழான தீர்மானம், 2025.04.28 ஆம் திகதிய 2434/04 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானியில் வெளியிடப்பட்ட 1989 ஆம் ஆண்டின் 13 ஆம் இலக்க உற்பத்தித் தீர்வை (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் 3 ஆம் பிரிவின் கீழான கட்டளை மற்றும் 2025.04.28 ஆம் திகதிய 2434/05 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானியில் வெளியிடப்பட்ட மோட்டார் வாகனங்கள் மீதான சொகுசு வரி தொடர்பான 2018 ஆம் ஆண்டின் 35 ஆம் இலக்க நிதிச் சட்டத்தின் 51 ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்படும் 19 ஆம் பிரிவின் கீழான ஒழுங்குவிதிகள் என்பன குழுவில் கருத்திற்கொள்ளப்பட்டு, அவற்றுக்கான அனுமதி வழங்கப்பட்டது.

இந்தக் கூட்டத்தில் பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க, பாராளுமன்ற உறுப்பினர்களான ரவீ கருணாநாயக்க, (கலாநிதி) கௌஷல்யா ஆரியரத்ன, (சட்டத்தரணி) லக்மாலி ஹேமச்சந்திர மற்றும் நிஷாந்த ஜயவீர ஆகியோர் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment