நாட்டின் சர்வதேச விமான நிலையங்களை அண்மித்து பட்டம் விடுவதை தவிர்க்குமாறு விமான நிலைய மற்றும் விமான சேவைகள் நிறுவனம் பொதுமக்களிடம் கோரியுள்ளது.
நாளாந்தம் சர்வதேச விமான போக்குவரத்து முன்னெடுக்கப்படும் விமான நிலையங்களை அண்மித்த 05 கிலோ மீற்றருக்குட்பட்ட பகுதிகளில் 300 அடிக்கு மேலாக பட்டம் விடுவது கடுமையான ஆபத்தை ஏற்படுத்தலாம் என நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.
கட்டுநாயக்க விமான நிலையத்தை அண்மித்த பகுதிகளில் பட்டம் விட்டு விளையாட வேண்டாம் என கட்டுநாயக்க விமான நிலைய முகாமைத்துவ பிரிவின் தலைவர் அருண ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
கட்டுநாயக்க விமான நிலைய முகாமைத்துவ பிரிவின் தலைவர் அருண ராஜபக்ஷ மேலும் தெரிவிக்கையில், கட்டுநாயக்க விமான நிலையத்தை அண்மித்த பகுதிகளில் பட்டம் விட்டு விளையாடுவதால் விமானங்களும் அதில் பயணிக்கும் பயணிகளுக்கும் ஆபத்து ஏற்படுகிறது.
விமானங்கள் பயணிக்கும் வேளைகளில் வானில் அங்கும் இங்கும் பட்டங்கள் பறப்பதால் விமான விபத்துக்கள் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது.
எனவே, கட்டுநாயக்க விமான நிலையத்தை அண்மித்த பகுதிகளில் பட்டம் விட்டு விளையாடுவதற்கு தடை செய்யப்பட்டுள்ளது.
விமான நிலையத்தை அண்மித்த பகுதிகளில் பட்டம் விட்டு விளையாடுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம், பலாலி சர்வதேச விமான நிலையம், மட்டக்களப்பு சர்வதேச விமான நிலையம், மத்தள சர்வதேச விமான நிலையம் மற்றும் இரத்மலானை சர்வதேச விமான நிலையத்தை அண்மித்த பகுதிகளில் பட்டம் விடுவது தடை செய்யப்பட்டுள்ளதாக கட்டுநாயக்க விமான நிலைய முகாமைத்துவ பிரிவின் தலைவர் அருண ராஜபக்ஷ மேலும் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment