போர் நிறுத்தத்தில் அமெரிக்காவுக்கு எந்த பங்கும் இல்லை : முதல்முறையாக ஒப்புக்கொண்ட டொனால்ட் ட்ரம்ப் - News View

About Us

About Us

Breaking

Friday, June 20, 2025

போர் நிறுத்தத்தில் அமெரிக்காவுக்கு எந்த பங்கும் இல்லை : முதல்முறையாக ஒப்புக்கொண்ட டொனால்ட் ட்ரம்ப்

‘இந்தியா - பாகிஸ்தான் இடையிலான போர் நிறுத்தத்துக்கு நான்தான் காரணம்’ என்று தொடர்ந்து கூறிவந்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், முதல்முறையாக ‘இரு நாட்டு தலைவர்களே போர் நிறுத்தத்துக்கு காரணம். இதில் அமெரிக்காவுக்கு எந்த பங்கும் இல்லை’ என்று உறுதிபட தெரிவித்துள்ளார். இந்தியாவின் கருத்தை பிரதமர் மோடி தெரிவித்ததை தொடர்ந்து, அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் மாதம் 22ஆம் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 26 சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்திய இராணுவம் மே மாதம் 7ஆம் திகதி துல்லிய தாக்குதல் நடத்தியது. இதையடுத்து, இந்தியா மீது பாகிஸ்தான் ராணுவம் ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தியது. இதை இந்தியா முறியடித்தது. இரு தரப்புக்கும் இடையே நடைபெற்ற சண்டை மே மாதம் 10ஆம் திகதி முடிவுக்கு வந்தது.

இது குறித்து இந்திய வெளியுறவுத்துறை செயலர் விக்ரம் மிஸ்ரி அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். 

ஆனால், அதற்கு முன்பாக, ‘அமெரிக்காவின் மத்தியஸ்தத்தில் இரவு முழுவதும் நடைபெற்ற நீண்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு இந்தியா - பாகிஸ்தான் முழுமையான, உடனடியான போர் நிறுத்தத்துக்கு ஒப்புக்கொண்டுள்ளன’ என்று அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் வலைதளத்தில் பதிவிட்டார். 

இது இந்தியாவில் கடும் விமர்சனங்களை ஏற்படுத்தியது. இதன் பிறகும், இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் நிறுத்தம் ஏற்பட நான்தான் காரணம் என அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தொடர்ந்து பலமுறை கூறி வந்தார். இதை மறுத்த இந்தியா, ‘பாகிஸ்தான் கேட்டுக் கொண்டதன் பேரில்தான் போர் நிறுத்தம் ஏற்பட்டது’ என கூறியது.

இந்நிலையில், கனடாவில் நடைபெற்ற ஜி7 உச்சி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி கடந்த 17ஆம் திகதி பங்கேற்றார். இதில் பிரதமர் மோடியும், ட்ரம்பும் தனியாக சந்தித்து பேச திட்டமிட்டிருந்தனர். ஆனால், இந்த மாநாட்டில் 16ஆம் திகதி பங்கேற்ற அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், ஒரு நாள் முன்னதாகவே நாடு திரும்பிவிட்டார். இதனால் இரு தலைவர்களும் நேரில் சந்திக்க முடியவில்லை. 

இதையடுத்து இருவரும் தொலைபேசியில் சுமார் 35 நிமிடங்கள் பேசினர். அப்போது, இந்தியா - பாகிஸ்தான் போர் நிறுத்தம் தொடர்பாக இந்தியா தரப்பு கருத்துக்களை அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பிடம் பிரதமர் மோடி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

‘‘இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மிகவும் துல்லியமானது. பஹல்காம் தீவிரவாத தாக்குதலுடன் தொடர்புடைய பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இருந்த தீவிரவாத முகாம்கள் மீது மட்டும்தான் இந்தியா தாக்குதல் நடத்தியது. பாகிஸ்தான் கேட்டுக் கொண்டதன் அடிப்படையில்தான் போரை இந்தியா நிறுத்தியது. இது தொடர்பாக இரு தரப்பு இராணுவமும் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்தி உடன்பாடு எட்டப்பட்டது. இந்த போர் நிறுத்தத்தில் அமெரிக்காவுக்கு எந்த பங்கும் இல்லை. இரு நாடுகளுக்கு இடையிலான விவகாரத்தில் மூன்றாம் தரப்பு மத்தியஸ்தம் செய்வதை இந்தியா ஒருபோதும் ஏற்காது” என்று ஜனாதிபதி ட்ரம்பிடம் பிரதமர் மோடி உறுதிபட தெரிவித்து விட்டதாக மத்திய வெளியுறவுத்துறை செயலர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்தார்.

இந்த சூழ்நிலையில், அமெரிக்கா சென்றுள்ள பாகிஸ்தான் இராணுவ தளபதி ஃபீல்ட் மார்ஷல் அசிம் முனீர், ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை சந்தித்துப் பேசினார். வெள்ளை மாளிகையில் அவருக்கு விருந்து அளிக்கப்பட்டது. இந்த சந்திப்புக்குப் பிறகு ட்ரம்ப் செய்தியாளர்களை சந்தித்தார். 

அப்போது ஈரான், இஸ்ரேல் போர் மற்றும் இந்தியா உடனான போர் நிறுத்தம் குறித்த கேள்விகளுக்கு ட்ரம்ப் கூறியதாவது, பாகிஸ்தான் இராணுவ தளபதிக்கு ஈரான் விவகாரம் பற்றி நன்றாகத் தெரியும். இஸ்ரேல், ஈரான் போர் பற்றி அவர் மகிழ்ச்சியடையவில்லை. பாகிஸ்தான் இஸ்ரேலுக்கு எதிரான நாடு அல்ல. அவர்கள் இரு நாட்டையும் உண்மையில் நன்கு அறிவார்கள்.

எனினும், அவர்கள் ஈரானை நன்கு அறிந்திருக்கலாம். என்ன நடக்கிறது என்பதை அவர்கள் பார்க்கிறார்கள். அவர் (முனிர்) என் கருத்துடன் உடன்படுகிறார். இந்தியா உடனான போரை தொடராமல் பாகிஸ்தான் அதை முடிவுக்கு கொண்டுவந்துள்ளது. இதற்காக நன்றி சொல்வதற்காகத்தான் பாகிஸ்தான் ராணுவ தளபதி அசிம் முனிர் உடனான சந்திப்பு தற்போது நடந்துள்ளது. 

போர் நிறுத்தம் ஏற்படாவிட்டால், அது ஒரு அணுசக்தி போராக இருந்திருக்கலாம். இரண்டு நாடுகளும் பெரிய அணுசக்திகள். ஆனாலும் போரை நிறுத்த அவர்கள் முடிவு செய்தார்கள். இரண்டு புத்திசாலிகள் போரை தொடர வேண்டாம் என முடிவு செய்தார்கள். அதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். இந்தியா மற்றும் பாகிஸ்தானுடன் வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ள நாங்கள் பணியாற்றி வருகிறோம்.இவ்வாறு ட்ரம்ப் கூறினார்.

‘‘இந்தியா - பாகிஸ்தான் போரை நிறுத்தியது நான்தான்’’ என்று ட்ரம்ப் தொடர்ச்சியாக பலமுறை கூறிவந்த நிலையில், முதல்முறையாக போர் நிறுத்தத்துக்கு இரு நாடுகளின் தலைவர்கள் மட்டுமே காரணம். அதில், அமெரிக்காவுக்கு எந்த பங்கும் இல்லை என்று கருத்து தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment