முல்லையில் மாவட்ட, பிரதேச செயலகங்களிலுள்ள ஆளணி வெற்றிடங்களை நிரப்புக : ஒட்டுசுட்டானை தனிப் பிரதேச சபை ஆக்குக என்றார் ரவிகரன் எம்.பி - News View

About Us

About Us

Breaking

Tuesday, March 4, 2025

முல்லையில் மாவட்ட, பிரதேச செயலகங்களிலுள்ள ஆளணி வெற்றிடங்களை நிரப்புக : ஒட்டுசுட்டானை தனிப் பிரதேச சபை ஆக்குக என்றார் ரவிகரன் எம்.பி

முல்லைத்தீவு மாவட்ட செயலகம் மற்றும் பிரதேச செயலகங்களில் பதவிநிலை உத்தியோகத்தர்கள் உள்ளடங்கலாக 140 உத்தியோகத்தர்களின் வெற்றிடங்கள் காணப்படுவதாக சுட்டிக்காட்டிய வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், குறித்த உத்தியோகத்தர் வெற்றிடங்களை நிரப்பித்தருமாறு பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சை வலியுறுத்திக் கேட்டிக்கொண்டார்.

அதேவேளை தற்போது புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் கீழ் காணப்படும் ஒட்டுசுட்டான் பிரதேசத்தை தனிப் பிரதேச சபையாக உருவாக்குமாறும், மாவட்ட செயலக கட்டட வேலையின் இரண்டாம் கட்ட பணிகளையும் விரைந்து ஆரம்பிக்கமாறும் இதன்போது மேலும் வலியுறுத்தியுள்ளார்.

பாராளுமன்றில் 04.03.2025 இடம்பெற்ற பொது நிர்வாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் 2025ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்ட குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், பொது நிர்வாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் குழுநிலை விவாதத்தில் கருத்துத் தெரிவிக்க சந்தர்ப்பம் கிடைத்தமை மகிழ்ச்சியளிக்கின்றது.

பொது நிர்வாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் அவர்களே, முல்லைத்தீவு மாவட்டத்தைப் பொறுத்த வரையில் 6 பிரதேச செயலாளர் பிரிவுகள் காணப்படுவதுடன், 136 கிராம அலுவலர் பிரிவுகள் காணப்படுகின்றன. இலங்கையில் 25 மாவட்டங்களில் மிகவும் பின்தங்கிய மாவட்டமாக முல்லைத்தீவு சொல்லப்படுகின்றது. வறுமையில் முதலாவது அல்லது இரண்டாவது என்ற இடத்தில் முல்லைத்தீவு மாவட்டம் உள்ளடக்கப்படுகின்றது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் ஆறு பிரதேச செயலாளர் பிரிவுகள் காணப்படுகின்றன. எனினும் நான்கு பிரதேச சபைகளே உள்ளன. மக்கள் அதிகமாகவும், நிலப்பரப்பு கூடுதலாகவும் உள்ள இரண்டு பிரதேச செயலகங்கள் ஒன்றாக சேர்ந்து ஒரு பிரதேச சபையாக இருக்கின்ற நிலமையானது அந்தந்த பிரதேச செயலகப் பிரிவுகளின் மக்களை பாதிப்பதாக அமைகின்றது. குறிப்பாக புதுக்குடியிருப்பு, ஒட்டுசுட்டான் இரண்டு பிரதேச செயலாளர் பிரவுகளும் புதுக்குடியிருப்பு பிரதேச சபையாக இயங்குகின்றது.

வடக்கு மாகாண சபையின் காலத்திலிருந்தே இந்தக் கோரிகையை உரிய வகையில் மக்களும், மக்கள் பிரதிகளும் வைத்துக்கொண்டு வருகின்றார்கள். ஆனால் இன்றுவரை இதற்கான தீர்வுகள் இந்தமக்களுக்கு கிடைக்கவில்லை. அந்த மக்களுடைய பிரதிநிதி என்ற வகையில் கேட்கின்றேன். இந்த விடயத்தில் தீர்வை வழங்கி முல்லைத்தீவு மாவட்டத்திற்கு உதவுங்கள்.

அதேவேளை முல்லைத்தீவு மாவட்டத்தில் அரச திணைக்களங்களில் ஆளணி விடயங்களும் அதிகமாகக் காணப்படுகின்றன.

குறிப்பாக பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் நிர்வாகத்தின் கீழ் காணப்படும் முல்லைத்தீவு மாவட்ட செயலகம் மற்றும் பிரதேச செயலகங்களின் தேவைப்பாடுகள், பிரச்சனைகள் காணப்படுகின்றன. இந்த குறைபாடுகள் தீர்க்கப்பட்டாலே மாவட்டத்தின் பல பிரச்சனைகள் தீர்ந்துவிடும்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் மாவட்ட செயலகம் மற்றும் பிரதேச செயலகங்களில் பதவிநிலை உத்தியோகத்தர்கள் உட்பட உத்தியோகத்தர்கள் வெற்றிடங்கள் காணப்படுகின்றன.

அந்த வகையில் நிர்வாக சேவையில் 02 வெற்றிடங்களும், கணக்காளர் சேவை 03 வெற்றிடங்கும், திட்டமிடல் சேவையில் 06 வெற்றிடங்களும், பொறியியல் சேவையில் 01 வெற்றிடமும், முகாமைத்துவ உதவியாளர் சேவையில் 91 வெற்றிடங்களும், தொழில்நுட்ப அலுவலர் 08 வெற்றிடங்களும் காணப்படுகின்றன. 06 தகவல் தொழில்நுட்ப உத்தியோகத்தர் வெற்றிடங்கள் காணப்படுகின்றன. 06 சாரதி வெற்றிடங்கள், 17 அலுவலகப் பணியாளர் வெற்றிடங்கள் உள்ளடங்கலாக மொத்தம் 140 வெற்றிடங்கள் காணப்படுகின்றன.

அமைச்சர் அவர்களே மாவட்ட நிர்வாகத்தை சீராகவும், மக்களுக்கான சேவைகளை ஒழுங்கான முறையிலும் செய்வதென்பது அனைத்து மாவட்டங்களுக்கும் அவசியமானதாகும். அதிலும் இவ்வாறான மிகவும் பின்தங்கிய மாவட்டத்திற்கு மிகவும் அவசியமாகும்.

இன்னுமொரு விடயம் குறிப்பிடவே வேண்டும். முல்லைத்தீவு மாவட்டத்தில் கடமையாற்றும் உத்தியோகத்தர்களில் அதிகமானவர்கள் யாழ் மாவட்டத்தை சேர்ந்தவர்களாகவும் சுமார் பத்து வருடங்களுக்கு மேலாக கடமை புரிவவர்களாகவும் காணப்படுகின்றார்கள். பணியாளர்கள் பற்றாக்குறை அதிலும் அதிகமானவர்கள் யாழ் மாவட்டத்தை சேர்ந்தவர்கள். இந்நிலையில் இயலக்கூடிய அளவுக்கு நிறைவான சேவையை செய்து கொண்டிருக்கின்றார்கள், பெரிதும் சிரமப்படுகின்றார்கள். மாவட்டச் செயலாளர் உட்பட பணியாற்றும் உத்தியோகத்தர்களைப் பாராட்டுகின்றேன். அமைச்சர் அவர்களே, இந்தக் குறைபாடுகளைத் தீர்க்க உதவுங்கள்.

அடுத்து முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தின் கட்டட வேலையின் முதலாம் கட்டம் கடந்த 2014ஆம் ஆண்டு பூர்த்தியடைந்து சுமார் பத்து ஆண்டுகள் கடந்துவிட்டன. இந்நிலையில் அதனுடைய இரண்டாம் கட்ட பணிகள் ஆரம்பிக்கப்படாமல் உள்ளமையால் அலுவலர்கள் இடவசதி இல்லாமல் பாரிய அசௌகரியங்களுக்கு முகம் கொடுக்கின்றார்கள்.

இந்தக் குறைபாடுகள் உங்களுடைய ஆட்சியில் தீர்க்கப்பட வேண்டும். பெயரளவில் பின் தங்கிய மாவட்டமாக இருப்பதற்கு இலங்கையின் நிர்வாகமும் காரணம். இந்த புறக்கணிப்புகள் வேண்டாம். 25 பேரும் உங்களது பிள்ளைகள்தான், அதாவது 25 மாவட்டங்களும் எல்லோரையும் சமமாகப் பாருங்கள்.

அமைச்சர் அவர்களே உங்களுடைய செயல்களில் எமக்கு நம்பிக்தை உண்டு. நிலமைகள் சீராகும் என்று நம்புகின்றோம். இதுதவிர மாவட்டத்தில் பல துறைகளிலும் இவ்வாறான குறைபாடுகள் உள்ளன. அந்தந்த அமைச்சுகளோடு பேசுகின்றோம். பேசிக்கொண்டு இருக்கின்றோம்.

எனவே அமைச்சர் அவர்களே தயவுசெய்து இந்த குறைபாடுகளைத் தீர்த்து வைக்குமாறு கேட்டுக் கொள்கின்றேன்.

நான் வன்னி பாராளுமன்ற உறுப்பினர். இவ்வாறான குறைபாடுகள் வவுனியா, மன்னார் மாவட்டங்களிலும் காணப்படுகின்றன. எம்மை ஒதுக்கிவிடாதீர்கள் என்றும் கேட்டுக் கொள்கின்றேன் என்றார்

No comments:

Post a Comment