மே மாதம் வரை வெப்பநிலை தொடரும் : அதிகம் நீர் பருகுங்கள் : வெள்ளை, இலகு நிற ஆடைகளை அணியுங்கள் - News View

About Us

About Us

Breaking

Tuesday, February 18, 2025

மே மாதம் வரை வெப்பநிலை தொடரும் : அதிகம் நீர் பருகுங்கள் : வெள்ளை, இலகு நிற ஆடைகளை அணியுங்கள்

(எம்.மனோசித்ரா)

நாட்டில் கொழும்பு உள்ளிட்ட 16 மாவட்டங்களில் மனித உடலில் உணரப்படும் வெப்பநிலை அவதானத்துக்குரிய மட்டத்தில் காணப்படுவதாக இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

எனவே குழந்தைகள் மற்றும் சிறுவர்களை வாகனங்களில் தனித்து விட வேண்டாம் என்றும், வெளியிடங்களில் மேற்கொள்ளக் கூடிய செயற்பாடுகளை இயன்றளவுக்கு மட்டுப்படுத்திக் கொள்ளுமாறும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

இந்த வெப்பநிலை எதிர்வரும் மே மாதம் வரை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

மேல் மாகாணத்தில் கொழும்பு, கம்பஹா, களுத்துறை மாவட்டங்களிலும், வடமத்திய மாகாணத்தில் அநுராதபுரம், பொலன்னறுவை மாவட்டங்களிலும், வடமேல் மாகாணத்தில் குருணாகல், புத்தளம் மாவட்டங்களிலும், வடக்கில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா, முல்லைத்தீவு, மன்னார் மாவட்டங்களிலும், தெற்கில் காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை மாவட்டங்களிலும், சப்ரகமுவ மாகாணத்தில் இரத்தினபுரி மாவட்டத்திலும் இவ்வாறு அதிகூடிய வெப்பநிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இன்று 18 ஆம் திகதி காலை 6 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களுக்குள் அதிகூடிய வெப்பநிலை இரத்தினபுரி மாவட்டத்திலேயே பதிவாகியுள்ளது. இம்மாவட்டத்தில் 36.7 பாகை செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.

இந்த வெப்பநிலையால் அதிகரிக்கும் உடல் உஷ்ணத்தை தணிப்பதற்கு குளிர் நீர், தோடம்பழம், இளநீர் உள்ளிட்டவற்றை சீனி சேர்க்காது எடுத்துக் கொள்ளுமாறு சுகாதார தரப்புக்கள் ஆலோசனை வழங்கியுள்ளன.

பெரியோர் நாளொன்றுக்கு குறைந்தபட்சம் 2 லீற்றர் நீரை அருந்த வேண்டும் என்றும், அதிக உடல் பருமனுடையவர்கள் 3 லீற்றர் நீரையும், 5 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்கள் ஒன்றரை லீற்றர் நீரையும், 5 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் ஒரு லீற்றர் நீரையும் பருக வேண்டும் என்றும் வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

மாறாக உடலுக்கு தேவையானளவு நீர் பருகுவதை தவிர்த்தால் நீர்ச்சத்து குறைபாடு மற்றும் ஞாபக மறதி போன்ற நோய்கள் ஏற்படும் என்றும் வைத்தியர்கள் எச்சரித்துள்ளனர்.

மேலும் நீண்ட நேரம் வெளியிடங்களில் இருந்து விட்டு மீண்டும் வீடு திரும்பிய பின்னர் குளிர் நீரில் குளித்தல் பொருத்தமானது என்றும், வெளியிடங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களில் குழந்தைகள் அல்லது சிறுவர்களை நீண்ட நேரம் தனித்து விட வேண்டாம் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

முடிந்தளவு பகல் வேளைகளில் வெளியில் மேற்கொள்ளக் கூடிய செயற்பாடுகளை தவிர்த்துக் கொள்ளுமாறும், வெளியில் செல்லும்போது வெள்ளை அல்லது இலகு நிற ஆடைகளை அணிந்து செல்லுமாறும் மக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment