(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)
பாதாள குழுக்களில் ஈடுபடும் அல்லது ஒழுங்கமைக்கும் தரப்பில் பலர் இலங்கையில் இல்லை. பாதுகாப்பு தரப்பின் ஒரு சில அதிகாரிகள் பாதாள குழுக்களுடன் தொடர்பு கொண்டுள்ளார்கள். கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்று ஆளும் தரப்பின் பிரதம கொறடாவான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் புதன்கிழமை (19) நடைபெற்ற அமர்வின்போது கொழும்பு புதுக்கடை நீதிமன்றத்துக்குள் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் எதிரணியின் உறுப்பினர் தயாசிறி ஜயசேகர ஆகியோர் முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது, பாதாளக் குழுக்களின் செயற்பாடுகள் குறித்து அரசாங்கம் விசேட அவதானம் செலுத்தியுள்ளது. பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. பாதாள குழுக்கள் பணம் தூயதாக்கல், போதைப் பொருள் வியாபாரம், பல சட்டவிரோத செயற்பாடுகளுடன் தொடர்புடையது.
பாதாள குழுக்களில் ஈடுபடும் அல்லது ஒழுங்கமைக்கும் தரப்பில் பலர் இலங்கையில் இல்லை. விசாரணைகளை முன்னெடுத்துச் செல்கையில் பாதுகாப்பு தரப்பின் ஒரு சில அதிகாரிகள் பாதாள குழுக்களுடன் தொடர்பு கொண்டுள்ளமை வெளிப்பட்டுள்ளது.
விசேட அதிரடிப்படை, பொலிஸ் மற்றும் புலனாய்வு பிரிவினை கொண்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. ஆகவே பாதாள குழுக்கள் குறித்து அரசாங்கம் விசேட அவதானம் செலுத்தியுள்ளது.
அனுமதிப்பத்திரமளிக்கப்பட்ட துப்பாக்கிகளை மீண்டும் பாதுகாப்பு அமைச்சுக்கு ஒப்படைக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்தியா, துபாய் ஆகிய நாடுகளில் தலைமறைவாகியுள்ள பாதாள குழுவினரை நாட்டுக்கு அழைத்து வருவதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. விசாரணை அனைத்தையும் பாராளுமன்றத்தில் குறிப்பிட முடியாது. பாதாள குழுவுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார்.
No comments:
Post a Comment