பிரத்தியேக நாமமாக கொண்டு செயற்பட வேண்டாம் : கடந்த காலங்களில் போதுமான அளவு பேசி முடித்து விட்டீர்கள் - ஹெக்டர் அப்புஹாமி - News View

About Us

About Us

Breaking

Thursday, February 6, 2025

பிரத்தியேக நாமமாக கொண்டு செயற்பட வேண்டாம் : கடந்த காலங்களில் போதுமான அளவு பேசி முடித்து விட்டீர்கள் - ஹெக்டர் அப்புஹாமி

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வசிக்கும் வீட்டை மீளப் பெறுவதையும், பாராளுமன்ற உறுப்பினர்களின் உணவுகளின் விலையை அதிகரிப்பதையும் பற்றி பேசிக் கொண்டிருக்காமல் சட்டத்தை நடைமுறைப்படுத்துங்கள். ஏனெனில் கடந்த காலங்களில் போதுமான அளவு பேசி முடித்து விட்டீர்கள். வெறுப்பு, சேறு பூசலை பிரத்தியேக நாமமாக கொண்டு செயற்பட வேண்டாம் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி ஆளும் தரப்பினரிடம் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (06) நடைபெற்ற புலமைச் சொத்துச் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது, புலமை சொத்து சட்டத்தின் கீழான ஒழுங்குவிதி பற்றி ஆளும் தரப்பினர் பேசவில்லை. மாறாக வெறுப்புக்களை மாத்திரமே தமது உரையில் முன்வைக்கிறார்கள்.

எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள் எதிர்க்கட்சித் தலைவருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடாமல் ஆளும் தரப்பினருடனா ? பேச்சுவார்த்தையில் ஈடுபடுவது. ஜனநாயகத்துக்கு எதிரான செயற்பாடுகளை அரசாங்கம் முன்னெடுக்கும்போது அதற்கு எதிராக ஒன்றிணைவது எதிர்க்கட்சிகளின் கடப்பாடாகும்.

தேயிலை, கறுவா, இறப்பர், தெங்கு ஆகியன இலங்கையின் பிரதான ஏற்றுமதி பொருளாக காணப்படுகின்றன. ஆனால் இலங்கையின் தேயிலை சீன நாட்டு தேயிலை உற்பத்தியாகவே சர்வதேச சந்தையில் விநியோகிக்கப்படுகிறது. இலங்கையின் உற்பத்திகளின் பிரத்தியேக நாமம் இல்லாதொழிக்கப்பட்டுள்ளன.

ஆகவே இழக்கப்பட்டுள்ள உற்பத்தி நாமத்தை மீள பெற்றுக் கொள்வதற்கு விசேட திட்டங்கள் வகுக்கப்பட வேண்டும். ஒழுங்கு விதிகளை நிறைவேற்றி விட்டு அவற்றை கிடப்பில் போடாமல், முறையாக செயற்பட வேண்டிய பொறுப்பு அரசாங்கத்துக்கு உண்டு.

தேங்காய் உட்பட உபரி பயிர்ச் செய்கைகளை ஊக்குவிப்பதற்கு விசேட திட்டங்கள் வகுக்கப்பட வேண்டும். தேங்காய் பால் எடுக்க வேண்டாம், தேங்காய் சம்பல் செய்ய வேண்டாம் என்று குறிப்பிட்டுக் கொண்டிருக்காமல், தெங்கு பயிர்ச் செய்கையை மேம்படுத்த நடவடிக்கைகளை எடுங்கள். நாங்களும் ஒத்துழைப்பு வழங்குகிறோம்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வசிக்கும் வீட்டை மீளப் பெறுவதையும், பாராளுமன்ற உறுப்பினர்களின் உணவுகளின் விலையை அதிகரிப்பதையும் பற்றி பேசிக் கொண்டிருக்காமல் சட்டத்தை நடைமுறைப்படுத்துங்கள். ஏனெனில் கடந்த காலங்களில் போதுமான அளவு பேசி முடித்து விட்டீர்கள். வெறுப்பு, சேறு பூசலை பிரத்தியேக நாமமாக கொண்டு செயற்பட வேண்டாம் என்று அரசாங்கத்திடம் கேட்டுக் கொள்கிறேன் என்றார்

No comments:

Post a Comment