(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)
2024 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்துக்கும், 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்துக்கும் இடையில் வேறுபாடுகள் ஏதும் கிடையாது. மக்கள் விடுதலை முன்னணியினர் கடந்த காலங்களில் எதிர்த்த விடயங்களை செயற்படுத்துவதாக வரவு செலவுத் திட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ளது. நவீன சந்தை பொருளாதாரத்துக்கான விடயங்கள் உள்ளடக்கியுள்ளமை வரவேற்கத்தக்கது என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் திங்கட்கிழமை (17) நடைபெற்ற அமர்வின்போது 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை ஜனாதிபதி முன்வைத்தார். வரவு செலவுத் திட்டம் குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது, பத்திரிகைகளில் ஒரு கேலிச்சித்திரத்தை பார்த்தேன். நிதியமைச்சின் செயலாளர் சுற்றும் கதிரையில் அமர்ந்துகொண்டு வரவு செலவுத் திட்ட உரையை முன்னாள் ஜனாதிபதிகளிடமிருந்து பெற்று தற்போதைய ஜனாதிபதிக்கு வழங்குவதை போன்று அந்த கேலிச்சித்திரத்தில் சித்தரிக்கப்பட்டிருந்தது.
அதுவே தற்போது நேர்ந்துள்ளது. மக்கள் விடுதலை முன்னணி மற்றும் தேசிய மக்கள் சக்தியின் அடையாளம் குறித்து முதலில் ஆராய வேண்டும்.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க முன்வைத்த வரவு செலவுத் திட்டத்தில் புதிய லிபரல் வாத கொள்கைகள் உள்ளடக்கப்பட்டுள்ளன. இதனை தற்போது சரியென்று குறிப்பிட்டால் ஏன் 40 வருடங்களாக இதனை எதிர்க்க வேண்டும். தற்போது சரியாயின் 40 வருடங்கள் அநியாயம்தானே, ஆகவே 2024 வரவு செலவுத் திட்டத்தின் தொடர்ச்சியே தற்போது முன்வைக்கப்பட்டுள்ளது. எவ்வித மாற்றமும் இல்லை.
75 ஆண்டு கால அரசாங்கங்கள் நாட்டை சீரழித்திருக்குமாயின் மாற்றத்தை முன்வைத்திருக்க வேண்டுமே, அவ்வாறு ஒன்றுமே இடம்பெறவில்லை. தற்போதைய மாற்றத்தை தவறென்று குறிப்பிடவில்லை. ஆனால் இந்த மாற்றம் பல ஆண்டுகளுக்கு முன்னரே ஏற்பட்டிருக்க வேண்டும்.
அரச சேவையாளர்களின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க குறிப்பிடுகிறார். ஆனால் இவர்கள்தான் அரச ஊழியர்களின் உரிமைகளை பாதுகாக்க குரல் கொடுத்தார். ஆகவே தற்போது புதிய லிபரல்வாத கொள்கைக்கு சென்றுள்ளமை வரவேற்கத்தக்கது என்றார்.
No comments:
Post a Comment