(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)
சட்டத்தின் ஆட்சியை பலவீனப்படுத்திவிட்டு தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தியுள்ளோம் என்று குறிப்பிடுவது பயனற்றது. புலனாய்வு பிரிவின் தகவல்களுக்கு அமைய உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இல்லையேல், பாரிய விளைவுகள் ஏற்படும் என முன்னாள் நீதி இராஜாங்க அமைச்சர் அனுராத ஜயரத்ன தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (20) நடைபெற்ற 2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் மீதான 3ஆம் நாள் விவாதத்தில் உரையாற்றுகையில் அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் உரையாற்றியதாவது, நாட்டின் சட்டத்தின் ஆட்சியை உறுதிப்படுத்தாமல் நாடு என்ற ரீதியில் எவ்வாறு முன்னோக்கிச் செல்லலாம் என்பது சந்தேகத்துக்கிடமானது.
2022ஆம் ஆண்டு காலப்பகுதியில் உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களை நீதிமன்றத்துக்கு அழைத்து வரும்போது புலனாய்வு பிரிவுக்கு விசேட தகவல் ஒன்று கிடைக்கப் பெற்றிருந்தது.
புலனாய்வு தகவலில் 'குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளும் சந்தர்ப்பத்தில் எவரேனும் சட்டத்தரணியை போன்று நடமாடி ஆயுதம் அல்லது பிறிதொரு வகையில் பாதிப்பை ஏற்படுத்தும் உபகரணத்துடன் நீதிமன்ற வளாகத்துக்குள் பிரவேசிப்பதற்கான சாத்தியம் காணப்படுவதாகவும், வழக்கு விசாரணையின்போது நீதிமன்றத்தின் பாதுகாப்பு அச்சுறுத்தலான நிலையில் காணப்படுவதாகவும்' குறிப்பிடப்பட்டிருந்தது.
நீதி இராஜாங்க அமைச்சராக நான் பதவி வகித்தேன். புலனாய்வு பிரிவின் தகவல்களை அடிப்படையாகக் கொண்டு செயற்பட்டதால் பாரிய விளைவு அப்போது தடுக்கப்பட்டது.
நாட்டின் சட்டத்தின் ஆட்சியை உறுதிப்படுத்தும் இடத்தில் நீதிபதி முன்னிலையில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்ற நிலையில் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தியுள்ளோம் என்று குறிப்பிட முடியாது.
பாதாளக் குழுக்களின் உறுப்பினர்கள் முக்கிய நபர்களை படுகொலை செய்துவிட்டு, படகு ஊடாக இந்தியாவுக்கு தப்பிச் செல்ல திட்டமிட்டுள்ளதாக புலனாய்வு பிரிவு பாதுகாப்பு தரப்புக்கு அறிக்கை சமர்ப்பித்திருந்தது. உரிய நடவடிக்கைகளை நாங்கள் முன்னெடுத்ததால் முக்கிய தரப்பினரை எம்மால் கைது செய்ய முடிந்தது.
ஆகவே, புலனாய்வுப் பிரிவு வழங்கும் தகவல்களை அடிப்படையாகக் கொண்டு உரிய நடவடிக்கைகளை எடுக்காமல் அரசாங்கம் பேசிக்கொண்டிருந்தால் பாரிய விளைவுகள் ஏற்படும் என்பதை அரசாங்கத்திடம் தெளிவாக குறிப்பிட்டுக் கொள்கிறேன் என்றார்.
No comments:
Post a Comment