‘ஸ்மார்ட் யூத்’ கண்காட்சி மற்றும் இசை நிகழ்ச்சிக்காக செலவிடப்பட்ட 188 மில்லியன் ரூபாவுக்கான காசோலைக்கான கையொப்பத்தை தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் முன்னாள் தலைவர் கடந்த ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னையதினமே இட்டுள்ளமை அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவில் (கோப் குழு) தெரியவந்தது.
செலவீனங்களுக்கான கொடுப்பனவுகளை வழங்குவதற்காக பணிப்பாளர் சபை அனுமதியை வழங்கியிராத சந்தர்ப்பத்திலேயே இந்தக் காசோலையில் முன்னாள் தலைவர் கையொப்பமிட்டிருந்ததாகவும், அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுத்து 2024 ஜனாதிபதித் தேர்தலுக்கு முதல்நாளே இவ்வாறு கைச்சாத்திட்டிருப்பதாகவும் இங்கு தெரியவந்தது.
ஜனாதிபதித் தேர்தலுக்கு முதல்நாள் திறைசேரியிலிருந்து 100 மில்லியன் ரூபா வழங்கப்பட்டு, முன்னாள் தலைவரின் அழுத்தத்திற்கு அமைய செலவுகளுக்கான ஒப்புதலை வழங்கி கைசோலையைக் கையளிக்க வேண்டி ஏற்பட்டதாக அதிகாரிகள் குழுவில் சுட்டிக்காட்டினர்.
தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் கணக்கு அதிகாரி என்ற ரீதியில் முன்னாள் தலைவர் வழங்கிய பணிப்புரைக்கு அமைய அவ்வாறு செயற்பட்டதாகவும், தாம் அவ்வாறு செயற்படாவிட்டிருந்தால் இடமாற்றங்களுக்கு உள்ளாகியிருக்க வேண்டி ஏற்பட்டிருக்கும் என்றும் அதிகாரிகள் இங்கு தெரிவித்தனர்.
இதற்கு அமைய ஜனாதிபதித் தேர்தலுக்கு முதல்நாள் 188 மில்லியன் ரூபாவுக்கான காசோாலையை வெளியிடவேண்டி ஏற்பட்டதாக அவர்கள் மேலும் குறிப்பிட்டனர்.
இது மிகவும் உணர்திறன் மிக்க விடயம் என அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவின் தலைவர் (வைத்தியர்) நிசாந்த சமரவீர தெரிவித்தார்.
அரசாங்க அதிகாரிகளைப் பலிக்கடாவாக்கி தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் முன்னாள் தலைவர் நிதியை தவறாகப் பயன்படுத்தியுள்ளார்.
அத்துடன், இதுபோன்ற சம்பவங்களின்போது அவற்றுக்கு எதிர்ப்புத் தெரிவிப்பதற்கான ஆளுமை அதிகாரிகளுக்கு இருக்க வேண்டும் என்றும் சுட்டிக்காட்டிய தலைவர், தமக்கு வழங்கப்பட்டுள்ள பொறுப்பை அதிகாரிகள் சரியான முறையில் மேற்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
இந்த விடயம் தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடல்கள் நடந்துகொண்டிருக்கும்போது தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் முன்னாள் நிதிப் பணிப்பாளர் குழுவிற்கு வருகை தந்திருந்தபோதும், குழுக் கூட்டம் முடிவடையும் வரை அவர் எந்தக் கருத்தையும் முன்வைக்காமல் இருப்பதற்கு முயற்சித்தமை தொடர்பிலும் கோப் குழுவின் உறுப்பினர்கள் எதிர்ப்பை வெளியிட்டனர்.
கீழ் மட்டத்தில் உள்ள அதிகாரிகள் கருத்துக்களை முன்வைக்கும்போது அமைதியாக இருக்க முயற்சிப்பது குழுவைப் பிழையாக வழிநடத்துவதாக அமைவதுடன், இதற்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் குழு சுட்டிக்காட்டியது.
அத்துடன், தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் முன்னாள் தலைவரைக் கோப் குழு முன்னிலையில் அழைப்பதற்கு இங்கு தீர்மானிக்கப்பட்டதுடன், இது பற்றி மேலும் கலந்துரையாடுவதற்கு (20) கோப் குழுவைக் கூட்டுவதற்கும் தீர்மானிக்கப்பட்டது.
தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் மற்றும் இலங்கை யூத் சேர்விஸ் (தனியார்) நிறுவனத்தின் 2022ஆம் ஆண்டு மற்றும் 2023ஆம் ஆண்டுக்கான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை, தற்போதைய செயலாற்றுகை மற்றும் 2021 நவம்பர் 16ஆம் திகதி நடத்தப்பட்ட கோப் குழுவில் வழங்கப்பட்ட முன்மொழிவுகளை நடைமுறைப்படுத்துவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் பற்றி ஆராயும் நோக்கில் கோப் குழு அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் (வைத்தியர்) நிஷாந்த சமரவீர தலைமையில் (18) கூடியபோதே இந்தத் தகவல்கள் யாவும் வெளிப்பட்டன.
2024 ஜனவரி முதல் ஓகஸ்ட் வரையிலான எட்டு மாத காலப்பகுதியில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் நடத்தப்பட்ட ஸ்மார்ட் யூத் புத்தாண்டுக் கொண்டாட்டம், தேசிய இளைஞர் வெசாக் விழா, தேசிய இளைஞர் பொசன் வலயம், யாழ்ப்பாண இளைஞர் சந்திப்பு நிகழ்ச்சி, 31 Night Youth Celebration மற்றும் ஸ்மார்ட் யூத் கண்காட்சி போன்ற நிகழ்வுகளுக்காக ஒதுக்கப்பட்ட 538,080,000 ரூபா தொகை ஒதுக்கீடு மற்றும் அதன் செலவினம் குறித்து கவனம் செலுத்தப்பட்டது.
அதன்படி, ஜனாதிபதி செயலகத்தின் இளைஞர் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் இதற்காக ஏறத்தாழ 398 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டிருந்தாலும், பற்றுச்சீட்டுக்களில் குறைபாடுகள் காணப்பட்டமையால் அந்தத் தொகை விடுவிக்கப்படவில்லையென்றும் தெரியவந்தது.
மேலும், வருட ஆரம்பத்தில் விநியோகஸ்தர்கள் பதிவு செய்யப்பட்டதாகவும், கடந்த காலங்களில் அவ்வாறு இல்லாமல் இளைஞர் சேவைகள் மன்றத்தின் முன்னாள் தலைவரின் விருப்பத்திற்கு அமைய அவர் குறிப்பிடும் நபர்களிடமிருந்து ஏலங்கள் பெறப்பட்டு விநியோகங்கள் பெறப்பட்டதாகவும் தெரியவந்தது. காசோலைகள் வழங்கப்பட்டபோது சம்பந்தப்பட்ட நபர் அங்கு இல்லை என்பதும், மற்றவர்களுக்கு அவற்றைப் பெற வாய்ப்பு வழங்கப்பட்டிருப்பதும் தெரியவந்தது.
மேலும், ஸ்ரீலங்கா யூத் சேர்விஸ் (தனியார்) நிறுவனத்தில் நிதி ஒழுக்கத்தைப் பேணத் தவறியது மற்றும் உள்ளகக் கணக்காய்வு நடத்தத் தவறியமை குறித்தும் குழு கவனம் செலுத்தியது. தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தில் நிரந்தரப் பதவிகளை வகிக்கும் 25 அதிகாரிகளை தேசிய இளைஞர் சேவைகள் கூட்டுறவு சங்கத்தில் நிரந்தர மற்றும் தற்காலிக அடிப்படையில் நியமிப்பது, முன்னைய கோப் குழுவால் எடுக்கப்பட்ட முடிவுகளை செயல்படுத்துவது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.
மேலும், பல சிக்கல் நிறைந்த சூழ்நிலைகள் தெளிவாகத் தெரிவதால், தேசிய இளைஞர் சேவைகள் மன்றம், ஸ்ரீலங்கா யூத் சேர்விஸ் (தனியார்) நிறுவனத்தில் மற்றும் தேசிய இளைஞர் சேவைகள் கூட்டுறவு சங்கம் ஆகியவை குறித்துக் கலந்துரையாடப்பட்ட விடயங்கள் குறித்து ஒரு மாதத்திற்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறும் குழு பரிந்துரைத்தது.
இக்கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.கே.எம். அஸ்லம், சமன்மாலி குணசிங்க, கோசல நுவன் ஜெயவீர, சுஜீவ திசாநாயக்க, (வைத்தியர்) எஸ். ஸ்ரீ பவானந்தராஜா, ஜகத் மனுவர்ன, ருவன் மாபலகம, சுனில் ராஜபக்ஷ, தர்மபிரிய விஜேசிங்க, அசித நிரோஷ எகொட விதான, திலின சமரக்கோன், சந்திமா ஹெட்டியாராச்சி மற்றும் சட்டத்தரணி லக்மாலி ஹேமச்சந்திர ஆகியோர் பங்கேற்றனர்.
No comments:
Post a Comment