(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)
ஹவாலா மற்றும் உண்டியல் முறைமையிலான பண பரிமாற்ற முறைமைகள் சட்டவிரோதமானதல்ல, இருப்பினும் இலங்கையில் அதற்கு முறையான கண்காணிப்புக்கள் ஏதும் கிடையாது. இலங்கை - சிங்கப்பூர் சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை மீள் பரிசீலனை செய்வதாக அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது என அரசாங்க நிதி தொடர்பான தெரிவுக்குழுவின் தலைவர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் புதன்கிழமை (08) நடைபெற்ற அமர்வில் அரசாங்க நிதி குழுவின் அறிக்கைகளை சமர்ப்பித்து உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் உரையாற்றியதாவது, 2005 ஆம் ஆண்டு 28 ஆம் இலக்க மீட்பு சட்டத்தின் பிரகாரம் இலங்கையில் ஹவாலா மற்றும் உண்டியல் முறைமையிலான பண பரிமாற்ற முறைமைகள் சட்டவிரோதமானதல்ல, இருப்பினும் அது முறையாக கண்காணிக்கப்படுவதில்லை.
இந்த முறைமையின் மூலம் சர்வதேச பரிவர்த்தனைகளை மேற்கொள்பவர்கள் 2024 ஜூன் மாதம் முதல் 2025 மே மாதம் வரையிலான 12 மாத காலத்திற்குள் முறையாக பதிவு செய்ய வேண்டும் என்ற யோசனை முன்மொழியப்பட்டது.
இந்த விடயம் தொடர்பில் முழுமையான மீளாய்வை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்குமாறு மத்திய வங்கியிடம் கோரினோம். இதற்கமைய ஹவாலா மற்றும் உண்டியல் முறைமை தொடர்பில் மத்திய வங்கி சமர்ப்பித்த அறிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது. அந்த அறிக்கையை பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கிறேன்.
கசினோ முறைமைக்கு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும் அதன் செயற்பாடுகள் குறித்து பல சிக்கல்கள் காணப்படுகின்றன. முறையான கண்காணிப்புக்கள் ஏதும் கிடையாது. 2002 ஆம் ஆண்டு ஒரு சில ஒழுங்கு விதிகள் நிறைவேற்றப்பட்டன. ஆகவே இவ்விடயம் தொடர்பில் விசேட கவனம் செலுத்துமாறு நிதியமைச்சிடம் வலியுறுத்தியுள்ளோம்.
அரசாங்க நிதி தொடர்பான தெரிவுக்குழுவுக்கு முன்வைக்கப்பட்ட ஒழுங்கு விதிகள் நிறைவேற்றப்பட்டன. இருப்பினும் இலங்கை - சிங்கப்பூர் சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான ஒழுங்கு விதிகள் நிறைவேற்றப்படவில்லை. இந்த வர்த்தக ஒப்பந்தத்தின் உள்ளடக்கத்தை நிறைவேற்ற வேண்டிய பொறுப்பு இலங்கைக்கு உண்டு.
இலங்கை - சிங்கப்பூர் சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தின் பிரகாரம் துறைமுகம் மற்றும் விமான நிலையங்களுக்கு வருடாந்தம் ஐந்துக்கு ஒன்று என்ற அடிப்படையில் வரி விலக்கு வழங்கப்பட வேண்டும். இந்த ஒப்பந்தம் 2018 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரை அரசியல் காரணிகளால் இடைநிறுத்தப்பட்டு , 2022 ஆம் ஆண்டு மீண்டும் அமுல்படுத்தப்பட்டது.
இந்த ஒப்பந்தத்தின் உள்ளடக்கத்தை செயற்படுத்த வேண்டும் என்று குழுவில் நான் வலியுறுத்திய போதும், ஆளும் தரப்பினர் அதற்கு இடமளிக்கவில்லை. இலங்கை - சிங்கப்பூர் சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை மீளாய்வு செய்யுமாறு குறிப்பிட்டனர். ஆகவே மீளாய்வு அறிக்கையை வெகுவிரைவாக குழுவுக்கு சமர்ப்பிக்குமாறு வலியுறுத்தியுள்ளேன் என்றார்.
No comments:
Post a Comment