ஜனாதிபதி சீனாவில் தைப் பொங்கல் கொண்டாடவுள்ளார்; பச்சை அரிசி தேங்காய் விலைகளை குறையுங்கள் - இராதாகிருஸ்ணன் - News View

About Us

About Us

Breaking

Wednesday, January 8, 2025

ஜனாதிபதி சீனாவில் தைப் பொங்கல் கொண்டாடவுள்ளார்; பச்சை அரிசி தேங்காய் விலைகளை குறையுங்கள் - இராதாகிருஸ்ணன்

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க எதிர்வரும் 13 ஆம் திகதி சீனாவுக்கு சென்று அங்கு பொங்கல் பண்டிகை கொண்டாடவுள்ளதாக குறிப்பிடப்படுகிறது. தைப் பொங்கல் தமிழர்களுக்கு முக்கியமானதாகும். ஆகவே பச்சை அரிசி மற்றும் தேங்காய் ஆகியவற்றை குறைந்த விலைக்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் சந்திரசேகர் அரசாங்கத்திடம் வலியுறுத்த வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் இராதாகிருஸ்ணன் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (08) நடைபெற்ற இறக்குமதி மற்றும் ஏற்றுமதிக் கட்டளைச் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதி, வெளிநாட்டுச் செலாவணிச் சட்டத்தின் கீழான கட்டளைகள், கொடுப்பனவு மற்றும் தீர்ப்பனவு முறைமைகள் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதி, சீட்டாட்டத் தொழில் (ஒழுங்குபடுத்தல்) சட்டத்தின் கீழான ஒழுங்குவிதி, துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்கள் அபிவிருத்தி அறவீட்டுச் சட்டத்தின் கீழான கட்டளை, கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டத்தின் கீழான ஒழுங்கு விதி மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது, நாட்டில் சமாதானம் மற்றும் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டால் மாத்திரமே வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இலங்கையில் தைரியமாக முதலீடு செய்வார்கள்.

துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் தற்போது தீவிரமடைந்துள்ளது. ஆகவே சமூக விரோத செயற்பாடுகளை முடிவுக்கு கொண்டுவந்து மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு அரசாங்கத்திடம் கேட்டுக் கொள்கிறோம்.

அரிசி, தேங்காய் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றத்தால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். எதிர்வரும் வாரம் பொங்கல் பண்டிகையை கொண்டாடவுள்ளோம். ஆனால் பச்சை அரிசி மற்றும் தேங்காய்க்கான தட்டுப்பாடு காணப்படுகிறது. ஒரு கிலோ கிராம் பச்சை அரிசியை 280 அல்லது 290 ரூபா என்ற அடிப்படையில் வாங்க வேண்டியுள்ளது.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க எதிர்வரும் 13 ஆம் திகதி சீனாவுக்கு சென்று அங்கு பொங்கல் பண்டிகை கொண்டாடவுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

தைப் பொங்கல் தமிழர்களுக்கு முக்கியமானதாகும். ஆகவே பச்சை அரிசி மற்றும் தேங்காய் ஆகியவற்றை குறைந்த விலைக்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் சந்திரசேகர் அரசாங்கத்திடம் வலியுறுத்த வேண்டும்.

No comments:

Post a Comment