மன்னார் நீதிமன்ற வளாகத்திற்கு எதிரே இன்று (16) நடந்த துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்துள்ளதுடன், இருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன்போது மூன்று ஆண்கள் மற்றும் ஒரு பெண் உள்ளிட்ட நால்வர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதோடு, ஆணொருவர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
உயிரிழந்தவர்கள் மன்னார் நொச்சிக்குளம் கிராமத்தைச் சேர்ந்த 61 வயதான சவேரியன் அருள் மற்றும் 42 வயதான செல்வக்குமார் யூட் என தெரிய வந்துள்ளது.
உயிரிழந்த இருவரும், காயமடைந்த ஆண் ஒருவரும் இன்று (16) மன்னார் நீதிமன்றத்தில் இடம் பெறவிருந்த வழக்கு விசாரணைகளுக்காக வருகை தந்தபோதே மோட்டார் சைக்கிளில் வந்தவர் துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டு விட்டு தப்பிச் சென்றதாக தெரிய வருகிறது.
துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கானவர்கள் வழக்கு விசாரணை ஒன்றிற்காக நீதிமன்றத்திற்கு வந்துள்ளமை விசாரணையில் தெரியவந்துள்ளது.
மன்னார் நொச்சிக்குளம் பகுதியில் கடந்த 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற இரட்டை படுகொலையை தொடர்ந்து நொச்சிக்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் மீது தொடர்ச்சியாக தாக்குதல் சம்பவங்கள் இடம்பெற்று வந்த நிலையில் இவர்கள் மீதும் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இச்சம்பவம் குறித்து பொலிஸார் தற்போது விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.
மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்
No comments:
Post a Comment