(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)
மாளிகாவத்தை வீட்டுத் தொகுதிக்கு சொந்தமான வாகனத் தரப்பிடம் தனியார் ஒருவருக்கு குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் அந்த இடத்தில் களஞ்சியசாலை ஒன்றும் அமைக்கப்பட்டு வருகிறது. அதனால் இது தொடர்பில் அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (21) வாய் மூல விடைக்கான கேள்வி நேரத்தின்போது இடையீட்டு கேள்வி ஒன்றை முன்வைத்து குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், கொழும்பு நகரில் பல வீட்டுத் தாெகுதிகள் இருக்கின்றன. சில வீட்டுத் தொகுதிகளில் வாகனத் தரப்பிடங்களும் அமைக்கப்பபடுகின்றன. அந்த வீடுகளில் இருப்பவர்களின் வாகனங்களை நிறுத்தி வைப்பதற்கே அது அமைக்கப்படுகிறது.
மாளிகாவத்தை வீட்டுத் தொகுதியில் 3 வாகனத் தரப்பிடங்கள் இருக்கின்றன. மாளிகாவத்தை ரம்யா வீதியில் பாரிய வாகனத் தரப்பிடம் ஒன்று இருக்கிறது. இந்த வாகனத் தரிப்பிடம் தனியார் ஒருவருக்கு குத்தகைக்கு வழங்கப்பட்டிருக்கிறது. அவர் வரி அறவிட்டுக் கொண்டு பாரிய களஞ்சியசாலை ஒன்றை அந்த இடத்தில் அமைத்து வருகிறார். இது தவறான நடவடிக்கை.
2020, 2024 காலப்பகுதியிலே தனியார் ஒருவருக்கு இந்த இடம் குத்தகைக்கு வழங்கப்பட்டிருப்பதாகவே தெரியவருகிறது.
அதேபோன்று அந்த வீட்டுத் தாெகுதிக்கு அருகில் விளையாட்டு மைதானம் ஒன்று இருக்கிறது. அதுவும் அந்த வீட்டுத் தாெகுதியில் இருக்கும் சிறுவர்கள் விளையாடுவதற்கு அமைக்கப்பட்டதாகும். அதனையும் குத்தகைக்கு வழங்கப்போவதாக தெரிய வருகிறது.
அதனால் குறித்த வாகனத் தரப்பிடம் மற்றும் சிறுவர்களின் விளையாட்டு மைதானத்தை பாதுகாத்து குறித்த வீட்டுத் தொகுதி மக்களின் பாவனைக்கு பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
இதற்கு நகர அபிவிருத்தி வீடமைப்பு அமைச்சர் அருன கருணாதிலக்க பதிலளிக்கையில், பொதுமக்களின் தேவைக்கு ஒதுக்கப்பட்ட இடமொன்றை வேறு விடயங்களுக்கு பயன்படுத்துவதற்கு அனுமதியளிக்கப் போவதில்லை. அதனால் இந்த விடயம் தொடர்பில் தேடிப்பார்த்து நடவடிக்கை எடுப்பேன் என்றார்.
No comments:
Post a Comment