ஜனாதிபதி ஆலோசனை வழங்குவதால் சட்டமா அதிபர் திணைக்களத்தின் சுயாதீனம் கேள்விக்குள்ளாக்கப்படும் : தேசிய மக்கள் சக்தி உலகில் இல்லாத பொய்யை சொன்னதால் உலகில் இல்லாத வகையில் வெற்றி பெற்றது - தயாசிறி ஜயசேகர - News View

About Us

About Us

Breaking

Wednesday, January 8, 2025

ஜனாதிபதி ஆலோசனை வழங்குவதால் சட்டமா அதிபர் திணைக்களத்தின் சுயாதீனம் கேள்விக்குள்ளாக்கப்படும் : தேசிய மக்கள் சக்தி உலகில் இல்லாத பொய்யை சொன்னதால் உலகில் இல்லாத வகையில் வெற்றி பெற்றது - தயாசிறி ஜயசேகர

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

வழக்குகளை துரிதப்படுத்துவது குறித்து சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு ஜனாதிபதி ஆலோசனை வழங்குவதாயின் சட்டமா அதிபர் திணைக்களத்தின் சுயாதீனம் கேள்விக்குள்ளாக்கப்படும். இவ்வாறான செயற்பாடுகளினால் சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும் நீதிமன்ற கட்டமைப்பின் எதிர்காலம் என்னவாகும் என்பது சந்தேகத்துக்குரியது என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (08) நடைபெற்ற இறக்குமதி மற்றும் ஏற்றுமதிக் கட்டளைச் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதி, வெளிநாட்டுச் செலாவணிச் சட்டத்தின் கீழான கட்டளைகள், கொடுப்பனவு மற்றும் தீர்ப்பனவு முறைமைகள் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதி, சீட்டாட்டத் தொழில் (ஒழுங்குபடுத்தல்) சட்டத்தின் கீழான ஒழுங்குவிதி, துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்கள் அபிவிருத்தி அறவீட்டுச் சட்டத்தின் கீழான கட்டளை, கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டத்தின் கீழான ஒழுங்கு விதி மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது, ஆட்சிக்கு வந்தவுடன் சுகாதாரம் மற்றும் உணவு மீது விதிக்கப்பட்டுள்ள வற் வரியை நீக்குவதாக ஜனாதிபதி குறிப்பிட்டார். ஆனால் தற்போது எவ்விதமான மாற்றமுமில்லாமல் வரி கொள்கை அமுல்படுத்தப்பட்டுள்ளது.

தேசிய மக்கள் சக்தி உலகில் இல்லாத பொய்யை சொன்னது. அதனால் உலகில் இல்லாத வகையில் வெற்றி பெற்றது. அதனால்தான் இந்த அரசாங்கத்தை பொய் அரசாங்கம் என்று குறிப்பிடுகிறோம்.

பொருளாதார நெருக்கடிக்கு 75 ஆண்டு கால ஆட்சியில் இருந்த அனைத்து அரசாங்கங்களும் பொறுப்புக்கூற வேண்டும் என்று ஆளும் தரப்பினர்கள் குறிப்பிடுகிறார்கள். மக்கள் விடுதலை முன்னணி நேரடியாகவும், மறைமுகமாகவும் அனைத்து அரசாங்கங்களுக்கும் ஒத்துழைப்பு வழங்கியுள்ளார்கள்.

அனைத்து நெருக்கடிகளுக்கும் கடந்த அரசாங்கம் பொறுப்புக்கூற வேண்டும் என்று குறிப்பிடுகிறார்கள். தற்போது குழந்தை பிறப்பு விகிதம் குறைவடைந்துள்ளது. அதற்கும் கடந்த அரசாங்கம் பொறுப்புக்கூற வேண்டும் என்று குறிப்பிடுகிறார்கள்.

இந்தியாவுடனான எட்கா ஒப்பந்தத்தை ஆரம்பத்தில் எதிர்த்தார்கள் இன்று எட்கா ஒப்பந்தம் வேண்டும் என்று குறிப்பிட்டார்கள்.

சர்வதேச நாணய நிதியத்துடனான செயற்பாடுகளின் உண்மைத் தன்மையை மக்களுக்கு நாங்கள் குறிப்பிட்டோம். ஆனால் தேசிய மக்கள் சக்தி சர்வதேச நாணய நிதியத்துக்கு எதிரான நிலைப்பாட்டையே மக்கள் மத்தியில் முன்னெடுத்தது. ஆனால் ஐ.எம்.எப் சரணம் கச்சாமி என்று துதி பாடுகிறது.

ஜனாதிபதிக்கும், சட்டமா அதிபருக்கும் இடையில் பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளது. பிரதான வழக்குகள் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.

கடந்த காலங்களில் ஒரு சில வழக்குகளை சட்டமா அதிபர் திணைக்களம் மீளப் பெற்றுள்ளது. பல்வேறு நெருக்கடிகளை சட்டமா அதிபர் திணைக்களம் முகங்கொடுத்துள்ளது.

வழக்குகளை துரிதப்படுத்துவது குறித்து சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு ஜனாதிபதி ஆலோசனை வழங்குவதாயின் சட்டமா அதிபர் திணைக்களத்தின் சுயாதீனம் கேள்விக்குள்ளாக்கப்படும். இவ்வாறான செயற்பாடுகளினால் சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும் நீதிமன்ற கட்டமைப்பின் எதிர்காலம் என்னவாகும் என்பது சந்தேகத்துக்குரியது.

சமூக கட்டமைப்பில் நிலவும் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு அரசாங்கம் எடுத்த தீர்மானங்கள் தோல்வியடைந்துள்ளது. அரசாங்கத்தின் குறைபாடுகளை சுட்டிக்காட்டும்போது அதனை ஏற்றுக் கொண்டு தவறை திருத்திக் கொள்ளும் மனநிலை ஆளும் தரப்பினருக்கு கிடையாது. மாறாக குறைகளை சுட்டிக்காட்டும் நபர் மீது சேறு பூசும் நிலைப்பாட்டில் அரசாங்கம் உள்ளது என்றார்.

No comments:

Post a Comment