நான் உறுதியளிக்கிறேன், நாட்டில் மீண்டும் அரிசி தட்டுப்பாடு ஏற்படாது : கனவு காண அனைவருக்கும் உரிமை உண்டு ஆனால் அது கனவாகவே இருக்கும் - ஜனாதிபதி அநுரகுமார - News View

About Us

About Us

Breaking

Tuesday, January 21, 2025

நான் உறுதியளிக்கிறேன், நாட்டில் மீண்டும் அரிசி தட்டுப்பாடு ஏற்படாது : கனவு காண அனைவருக்கும் உரிமை உண்டு ஆனால் அது கனவாகவே இருக்கும் - ஜனாதிபதி அநுரகுமார

பெரும்போகத்துக்காக அரிசியின் கையிருப்புக்களை பராமரிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதால், மீண்டும் நாட்டில் அரிசித் தட்டுப்பாடு ஏற்படாதென ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

தேசிய மக்கள் சக்தியின் களுத்துறை மாவட்ட ஹொரணை தேர்தல் தொகுதியின் கட்சிக் கூட்டம் (19) ஹொரணை பொக்குனுவிட்டவில் உள்ள ஜனசேத விளையாட்டரங்கில் நடைபெற்றது.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், சுகாதார மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸவும் கலந்து கொண்டிருந்தார்.

ஜனாதிபதி இங்கு மேலும் கருத்து தெரிவிக்கையில், வரவு செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட பல தரப்பினருக்கு நிவாரணம் வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் இதன்போது கூறினார்.

அரசாங்கம் எவ்வளவு காலம் செயற்படும்? ஐந்து வருடங்களுக்கு…” அப்படியானால், நாம் செல்ல வேண்டிய தூரம் அதிகம். பொதுவாக, நம் நாட்டில் அரசியலில் தோற்ற பிறகு, அந்தக் குழுக்கள் கொஞ்சம் கூச்சலிடுவார்கள். ஆனால் அதுவும் கொஞ்ச காலத்துக்குத்தான்.

இப்போதும் கூட, “அரசாங்கம் நிலையாக இருப்பதற்கு முன்னர் அதை சீர்குலைக்க முடியுமா?” என்று கூச்சலிடுகிறார்கள்.

“நாங்கள் அவர்களுக்கு கூற விரும்புகிறோம். கனவு காண அனைவருக்கும் உரிமை உண்டு. ஆனால் அது கனவாகவே இருக்கும்.

அரிசி பிரச்சினை உள்ளது. ஏற்றுக் கொள்கிறோம். தட்டுப்பாடு ஏற்பட்டது. தரவுகள் இன்மையே அதற்கு காரணம்.

நாட்டில் எவ்வளவு அரிசி உற்பத்தி செய்யப்படுகிறது, எவ்வளவு நுகரப்படுகிறது, எவ்வளவு பற்றாக்குறை ஏற்படுகிறது என்பது தொடர்பில் தரவுகள் இல்லை.

நான் உறுதியளிக்கிறேன். நாட்டில் இனி ஒருபோதும் அரிசித் தட்டுப்பாடு ஏற்படாது. இந்த பெரும்போகத்தில் நெல் இருப்பது தனியாரிடம் மாத்திரமல்ல. அரசாங்கத்திடமும் நெல் கையிருப்பை வைத்திருப்பதற்கான வேலைத்திட்டத்தை நாம் மேற்கொண்டுள்ளோம்.

நிர்ணய விலையை விட ஒரு ரூபாய் அதிகரித்தும் அரியை விற்பனை செய்ய இனி இடமளிக்க மாட்டோம்” என்றும் ஜனாதிபதிதெரிவித்தார்.

No comments:

Post a Comment