சுண்ணாம்புக்கல் அகழ்வில் சட்டவிரோத செயற்பாடுகள் யாவும் உடனடியாக முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டும் - பொ. ஐங்கரநேசன் - News View

About Us

About Us

Breaking

Thursday, January 9, 2025

சுண்ணாம்புக்கல் அகழ்வில் சட்டவிரோத செயற்பாடுகள் யாவும் உடனடியாக முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டும் - பொ. ஐங்கரநேசன்

யாழ்ப்பாண குடாநாடு கடலாலும், கடல் நீரேரிகளாலும் சூழப்பட்ட ஒரு தீபகற்பம். பூமி வெப்பமடைவதன் விளைவாக ஏற்பட்டுவரும் கடல்மட்ட உயர்வு குடாநாட்டை பெருமளவு பாதிக்கும் என்று எதிர்வு கூறப்பட்டுள்ளது. இந்நிலையில், கட்டுப்பாடற்ற சட்டவிரோத சுண்ணாம்பு அகழ்வு காலநிலை மாற்றத்தால் ஏற்படவுள்ள பாதகங்களை மேலும் விரைவுபடுத்தும், அதிகப்படுத்தும். இவற்றை கருத்திற்கொண்டு விவசாய நடவடிக்கையை பாதிக்காத வகையில் சுண்ணாம்புக்கல் அகழ்வை நெறிப்படுத்துவதோடு, இதில் நிலவக்கூடிய சட்டவிரோதச் செயற்பாடுகள் அனைத்தும் உடனடியாக முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டும் என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் கோரிக்கை விடுத்துள்ளார்.

வட மாகாண ஆளுநரிடம் சட்டவிரோத சுண்ணக்கல் அகழ்வை முடிவுறுத்தக்கோரி பொ. ஐங்கரநேசன் இன்று (09) மனுவொன்றை சமர்ப்பித்த பின்னர் நிகழ்த்திய ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் கருத்துத் தெரிவிக்கையில், இலங்கையில் சுண்ணாம்புக்கல் வடமேற்கு மாகாணத்திலும், வடக்கு மாகாணத்திலும் கரையோரத்தை அண்டி காணப்படும் ஒரு இயற்கை வளமாகும். புவிச்சரித வரலாற்றில் பல மில்லியன் வருடங்களுக்கு முற்பட்ட மயோசின் காலத்தில் கடலின் அடித்தள படிவுகளாக தோற்றம் பெற்ற இப்பாறைகள் சீமெந்து தயாரிப்பிலும், இதர கட்டுமானங்களிலும் பிரதான மூலப்பொருளாக விளங்குகின்றது.

கூடவே, சூழலியல் ரீதியாக கடல் நீர் நிலத்தடி நீருடன் கலப்பதை  தடை செய்வதிலும், நிலத்தடி நீரோட்டத்திலும் மிகவும் இன்றியமையாத பங்களிப்பையும் வழங்கி வருகிறது. சமீப நாட்களாக சுண்ணாம்புக்கல் அகழ்வும் அதனை வேறு மாவட்டங்களுக்கு எடுத்துச் செல்வதும் பெரும் சர்ச்சைகளைத் தோற்றுவித்துள்ளது. 

சுண்ணாம்புக்கல் அகழ்வு பயிர்ச் செய்கைக்காக இரண்டடி ஆழம் வரையில் கிளறி எடுத்தல் என்ற நிலையில் இருந்து, இன்று சீமெந்து தயாரிப்புக்காக கனரக வாகனங்களைக் கொண்டு அகழ்ந்தெடுத்தல் என்ற நிலைக்கு மாறியுள்ளது.

குறிப்பாக, தென்மராட்சி சரசாலையில் அனுமதியின்றி சட்டவிரோதமாக அரச காணிகளிலும், தனியார் காணிகளிலும் பாரிய அளவில் சுண்ணாம்புக்கல் அகழ்வு இரவு நேரங்களில் இடம்பெற்று வருகிறது.

காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலை இயக்கப்படாதிருப்பதற்கு சுண்ணாம்புக் கல்லைப் பெறுவதில் உள்ள இடர்பாடுகளே காரணம். கீரிமலையில் சுண்ணாம்புக்கல் அகழ்வில் ஏற்பட்ட பிரமாண்ட குழிகள் இன்னமும் மூடப்படாத நிலையில் இனிமேலும் அகழ்வைத் தொடர்வது சூழல் ரீதியாக பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதால் கிளிங்கர்களை எடுத்துவந்து, சீமெந்து தொழிற்சாலையை மீள இயக்க முடியும் என்று யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் முடிவு எட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில் இங்கிருந்து வேறு மாவட்டங்களுக்கு சுண்ணாம்புக்கல்லை எடுத்துச் செல்வது மக்களிடையே கடும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.

நொறுக்கப்பட்ட சுண்ணாம்புக்கற்களை அரைத் தயாரிப்பாகவோ அல்லது முடிக்கப்பட்ட தயாரிப்புகளாகவோ கருத முடியாது என்பதால் இதனை எடுத்துச் செல்வதற்கு போக்குவரத்து உரிமம் அவசியம் என புவிச்சரிதவியல் அளவை சுரங்கங்கள் பணியகம் யாழ். மாவட்டச் செயலருக்கு தெளிவு படுத்தியுள்ளது.

இந்நிலையில், யாழ்ப்பாணத்தில் இருந்து சுண்ணாம்புக்கல் வெளி மாட்டங்களுக்கு தங்கு தடையில்லாமல் எடுத்துச் செல்லப்படுகிறது. ஆளுநர் உடனடியாக சுண்ணக்கல் அகழ்வில் நிலவும் சட்டவிரோத செயற்பாடுகளை களைய ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.

யாழ். நிருபர் பிரதீபன்

No comments:

Post a Comment