ஜனாதிபதிக்கு மீண்டும் கடிதம் அனுப்பவுள்ள தேர்தல் ஆணைக்குழு - News View

About Us

About Us

Breaking

Thursday, January 2, 2025

ஜனாதிபதிக்கு மீண்டும் கடிதம் அனுப்பவுள்ள தேர்தல் ஆணைக்குழு

புலம்பெயர் தொழிலாளர்கள் மற்றும் சிறைக் கைதிகள் ஆகியோரின் வாக்குரிமையை உறுதி செய்யுமாறு கோரிக்கை விடுத்து ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு மீண்டும் எழுத்து மூலமான கடிதமொன்றை அனுப்பவுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தலில் அநுரகுமார திசாநாயக்க வெற்றி பெற்றதும் புலம்பெயர் தொழிலாளர்கள் மற்றும் சிறைக் கைதிகளின் வாக்குரிமையை உறுதி செய்வதற்கான சட்ட ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு கோரி உத்தியோகபூர்வமான கடிதமொன்றை தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க அனுப்பி வைத்திருந்தார்.

இந்நிலையில் குறித்த விடயம் சம்பந்தமாக உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு வலியுறுத்தி மீண்டும் கடிதமொன்றை அனுப்பவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, ஜனாதிபதி தேர்தலின் பின்னர் ஜனாதிபதியிடம் புலம்பெயர் தொழிலாளர் மற்றும் சிறைக் கைதிகள் ஆகியோரின் வாக்குரிமையை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு கோரியிருந்தேன்.

அப்போது சட்ட ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்று ஜனாதிபதி கூறியதோடு அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறியிருந்தார்.

இவ்வாறான நிலையில் இந்த ஆண்டில் உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் நடத்தப்படவுள்ளதாக ஜனாதிபதி அறிவித்துள்ளார்.

ஆகவே விரைந்து நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டால் குறித்த இரு தரப்பினருக்குமான வாக்குரிமையை உறுதி செய்ய முடியும்.

அந்த வகையில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு மீண்டும் குறித்த விடயத்தினை வலியுறுத்தி எழுத்து மூலமான கோரிக்கையை விடுக்கவுள்ளோம் என்றார்.

No comments:

Post a Comment