புதிய சபாநாயகராக ஜகத் விக்ரமரத்ன தெரிவு - News View

About Us

About Us

Breaking

Monday, December 16, 2024

புதிய சபாநாயகராக ஜகத் விக்ரமரத்ன தெரிவு

பத்தாவது பாராளுமன்றத்தின் சபாநாயகராக தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் வைத்திய கலாநிதி ஜகத் விக்கிரமரத்ன இன்று (17) பாராளுமன்றத்தில் இடம்பெற்ற சபாநாயர் தேர்வின்போது ஏகமனதாகத் தெரிவு செய்யப்பட்டார்.

பத்தாவது பாராளுமன்றத்தின் சபாநாயகராக செயற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் அசோக ரன்வல அண்மையில் சபாநாயகர் பதவியிலிருந்து இராஜினாமா செய்ததன் காரணமாக ஏற்பட்ட வெற்றிடத்துக்கு வைத்திய கலாநிதி ஜகத் விக்கிரமரத்ன இவ்வாறு தெரிவு செய்யப்பட்டார்.

அதற்கமைய, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவினால் தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் வைத்திய கலாநிதி ஜகத் விக்கிரமரத்னவின் பெயர் முன்மொழியப்பட்டதுடன், சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க அதனை வழிமொழிந்தார். 
புதிய சபாநாயகரை முன்மொழிந்து, வழிமொழிந்த பிரதமர் மற்றும் சபை முதல்வரினால் சம்பிரதாயபூர்வமாக புதிய சபாநாயகர் தனது ஆசனத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

அதன் பின்னர் புதிய சபாநாயகராக தெரிவு செய்யப்பட்டமை தொடர்பில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மற்றும் எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட கட்சித் தலைவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

அதனையடுத்து, சபாநாயகராக தன்னை தெரிவு செய்தமை தொடர்பில் நன்றி தெரிவித்த சபாநாயகர், பாராளுமன்ற நிலையியற் கட்டளைகள் மற்றும் மரபுகளுக்கு அமைய சுயாதீனம், கௌரவம் மற்றும் அனைத்து உறுப்பினர்களினதும் உரிமைகளைப் பாதுகாத்து பொதுமக்களின் நலுனுக்காக பணியாற்ற அர்ப்பணிப்பதாகத் தெரிவித்தார்.

No comments:

Post a Comment