நிதி மோசடியில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்காரவின் சகோதரர் திசர நாணயக்காரவுக்கு பணம் வழங்கிய வேறு எவரேனும் இருப்பின் குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்கு அறிவிக்குமாறு கோரப்பட்டுள்ளது.
இது குறித்த தகவல்களை வழங்குவதற்காக குற்றப் புலனாய்வு திணைக்களம் 0112 337 219 என்ற விசேட தொபேசி இலக்கத்தையும் வழங்கியுள்ளது.
குற்றப் புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்ட மனுஷ நாணயக்காரவின் சகோதரர் திசர நாணயக்காரவை எதிர்வரும் 06 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கம்பஹா நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நீதிமன்றத்தில் சந்தேகநபர் முன்னிலைப்படுத்தப்பட்டபோது 2019 முதல் 2024 ஒக்டோபர் வரையான காலப்பகுதியில், அவரின் கணக்கில் 27 கோடி ரூபா பணம் வைப்புச் செய்யப்பட்டுள்ளதாகக் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.
திசர நாணயக்கார அண்மையில் (28) பிபிலை பகுதியில் வைத்து குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
பின்லாந்தில் வேலைவாய்ப்பைப் பெற்றுத் தருவதாகக்கூறி பண மோசடி செய்த குற்றச்சாட்டில், இவர் கைது செய்யப்பட்டார்.
நபரொருவரிடம் 40 இலட்சம் ரூபா பணத்தைக் கோரிய இவர்,அந்நபரிடமிருந்து 30 இலட்சம் ரூபாவை பெற்றுள்ளதாகவும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
முறைப்பாட்டைச் சமர்ப்பித்த நபர் தலா 15 இலட்சம் ரூபா வீதம் இரண்டு தடவைகளில் 30 இலட்சம் ரூபாவை திசரவின் கணக்கில் வரவு வைத்துள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
இதையடுத்தே சந்தேகநபரின் வங்கிக் கணக்கு தொடர்பான விபரங்களைப் பெற்றுக் கொண்டதாக குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் நீதிமன்றில் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment