இணக்கப்பாட்டுக்கமையவே தேசியப்பட்டியல் நியமனம் : ஹக்கீம் நீதிமன்றம் செல்ல முன்னரே தீர்மானம் எடுக்கப்பட்டுவிட்டது - ரஞ்சித் மத்தும பண்டார - News View

About Us

About Us

Breaking

Friday, December 13, 2024

இணக்கப்பாட்டுக்கமையவே தேசியப்பட்டியல் நியமனம் : ஹக்கீம் நீதிமன்றம் செல்ல முன்னரே தீர்மானம் எடுக்கப்பட்டுவிட்டது - ரஞ்சித் மத்தும பண்டார

(எம்.மனோசித்ரா)

ஐக்கிய மக்கள் கூட்டணியின் பங்காளி கட்சிகளுக்கு வழங்கிய வாக்குறுதிகளின் அடிப்படையில் அவர்களுடன் எட்டப்பட்ட இணக்கப்பாட்டுக்கமையவே தேசியப்பட்டியலுக்கான உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டிருக்கின்றார்கள். எனவே ஏனைய உறுப்பினர்களும் யதார்த்தத்தைப் புரிந்துகொண்டு கட்சியுடன் தொடர்ந்தும் இணைந்து செயற்படுவார்கள் என்று நம்புவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.

தேசியப்பட்டியல் விவகாரம் தொடர்பில் வினவியபோது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், ஐக்கிய மக்கள் கூட்டணியின் பங்காளி கட்சிகளுக்கு வழங்கிய வாக்குறுதிகளின் அடிப்படையில் அவர்களுடன் எட்டப்பட்ட இணக்கப்பாட்டுக்கமைய தீர்மானம் எடுக்கப்பட்டிருக்கிறது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவுப் ஹக்கீம் நீதிமன்றம் செல்ல முன்னரே தீர்மானம் எடுக்கப்பட்டுவிட்டது.

எவ்வாறிருப்பினும் 4 தேசியப்பட்டியல் ஆசனங்களால் அனைவரையும் திருப்திப்படுத்த முடியாது. கோரிக்கை விடுக்கும் அனைவருக்கும் வாய்ப்பளிக்கவும் முடியாது.

ஹக்கீம் நீதிமன்றம் சென்றாலும், சென்றிருக்காவிட்டாலும் அவருடன் எட்டப்பட்ட இணக்கப்பாட்டுக்கமையவே நாம் தீர்மானம் எடுத்திருப்போம்.

எனவே யதார்த்தத்தை உணர்ந்து எவரும் எம்முடன் அல்லது கட்சித் தலைமைத்துவத்துடன் கோபமடையமாட்டார்கள் என்று நம்புகின்றோம்.

இந்த விடயத்துக்காக எவரும் கட்சியை விட்டுச் செல்வர் என நாம் எண்ணவில்லை. கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் என்ற ரீதியில் அனைவரும் சிந்தித்து செயற்படுவார்கள்.

எதிர்க்கட்சியிலிருந்து கொண்டு அடுத்து வரும் தேர்தலில்களில் வெற்றி பெறுவதற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுத்துச் செல்வோம்.

சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பில் கலந்துரையாடி தீர்மானம் எடுக்கப்படும். முழு நாட்டுக்கும் இந்த அரசாங்கம் நம்பிக்கை துரோகம் இழைத்திருக்கிறது. அதற்கமைய மக்களுக்காக நாம் உரிய நடவடிக்கைகளை முன்னெடுப்போம் என்றார்.

No comments:

Post a Comment