தொற்றுநோய் போன்று பரவும் காட்டு விலங்குகளை கட்டுப்படுத்த வேண்டும். சுற்றுச் சூழலியலாளர்கள் குறிப்பிடுவதை போன்று நீண்டகால தீர்வுக்கான நடவடிக்கைகளை முன்னெடுத்தால் விவசாயம் முழுமையாக இல்லாதொழியும் என விவசாயம், கால்நடை வளர்ப்பு, காணி மற்றும் விவசாயத்துறை அமைச்சர் லால் காந்த தெரிவித்தார்.
கண்டி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே கே.டி. லால்காந்த மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு கருத்து தெரிவித்த அமைச்சர் மேலும் குறிப்பிடுகையில், வன விலங்குகளால் பயிர்கள் சேதமடைவதைத் தடுக்க ஒவ்வொரு கிராம சேவையாளர் பிரிவிலும் விவசாய சேவைகள் திணைக்களத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகளைக் கொண்ட ஒரு பிரிவை நிறுவ நடவடிக்கை எடுக்கப்படும்.
இப்பிரச்சினையை விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள் சரியாக இனங்கண்டு அவர்களின் முன்மொழிவுகள் மூலம் பிரச்சினைக்கு வழங்கப்பட வேண்டிய தீர்வுகள் கண்டறியப்பட வேண்டும்.
அடுத்த ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திற்கு முன் முன்மொழிவுகளைப் பெறுமாறு விவசாய சேவைகள் திணைக்களத்திற்கு விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகள் அறிவித்துள்ளனர். அதன்படி இந்த வேண்டுதலுக்கான பதிலை மிக விரைவில் வழங்குவதே எங்கள் நோக்கம்.
பயிர்ச் செய்கைகளை நாசம் செய்யும் காட்டு விலங்குகளை கொல்ல வேண்டும் என்று குறிப்பிடவில்லை. தொற்றுநோய் போன்று பரவும் காட்டு விலங்குகளை கட்டுப்படுத்த வேண்டும். சுற்றுச் சூழலியலாளர்கள் குறிப்பிடுவதைப் போன்று நீண்டகால தீர்வுக்கான நடவடிக்கைகளை முன்னெடுத்தால் விவசாயம் முழுமையாக இல்லாதொழியும்.
மழை காலங்களில் கண்டி, அக்குறணை நகரம் மற்றும் அதனை அண்டிய பிரதேசங்கள் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்படுகின்றன. அந்த பகுதி மக்கள் நீண்ட காலமாக இந்த பிரச்சினைக்கு முகங்கொடுத்து வருகின்றனர்.
அக்குறனை பிரதேச வெள்ள அனர்த்தத்திற்கு தீர்வுகாண கடந்த காலங்களில் முழுமையான எந்தவொரு செயற்திட்டங்களும் முன்னெடுக்கப்பட்டிருக்கவில்லை. எனவே அதற்கு தீர்வை பெற்றுக் கொடுக்க வேண்டியுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் நாம் கவனம் செலுத்தியுள்ளோம். முதற்கட்டமாக சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்டுள்ள கட்டிடங்களை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளோம்.
அத்துடன் வடிகான்களில் உள்ள கழிவுகளை அகற்றுவதற்காக வேலைத்திட்டத்தை ஆரம்பிக்க உள்ளோம்.
மேலும் இந்த விடயம் தொடர்பில் மாவட்ட செயலாளர் ஊடாக சம்பந்தப்பட்ட தரப்பினருடன் இணைந்து முறையான வேலைத்திட்டத்தை முன்வைக்க ஆலோசனை வழங்கியுள்ளோம்.
அத்துடன் அந்த திட்டத்தை அடுத்த மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் முன்வைக்குமாறு அறிவுறுத்தியுள்ளோம். அதன் ஊடாக எமக்கு இந்த விடயத்தில் தலையீடு செய்து தீர்வுகாண முடியும் என்றார்.
No comments:
Post a Comment