(எம்.ஆர்.எம். வசீம், இராஜதுரை ஹஷான்)
159 ஆசனங்களுடன் அரசாங்கம் ஆட்சியமைத்துள்ளது. மக்களின் வாழ்க்கையில் புதிய மாற்றம் ஏற்பட வேண்டும். மக்களின் எதிர்பார்ப்புக்கள் அனைத்தும் நிறைவேற வேண்டும். நாட்டின் நலன்கருதி அரசாங்கம் எடுக்கும் சிறந்த தீர்மானங்களுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம் என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் புதன்கிழமை (04) நடைபெற்ற ஜனாதிபதியின் கொள்கை பிரகடன உரை மீதான இரண்டாம் நாள் விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது, பத்தாவது பாராளுமன்றத்துக்கு மீண்டும் வருகை தந்துள்ளேன். முதற்கண் எல்லாம்வல்லா அல்லாவுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். மட்டக்களப்பு மாவட்ட மக்கள் பாரிய சவால்களுக்கு மத்தியில் எனது வெற்றிக்காக பாடுப்பட்டார்கள். ஆகவே எனக்கு ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
159 ஆசனங்களுடன் அரசாங்கம் ஆட்சியமைத்துள்ளது. மக்களின் வாழ்க்கையில் புதிய மாற்றம் ஏற்பட வேண்டும். மக்களின் எதிர்பார்ப்புக்கள் அனைத்தும் நிறைவேற வேண்டும். நாட்டின் நலன்கருதி அரசாங்கம் எடுக்கும் சிறந்த தீர்மானங்களுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம்.
கடந்த வாரம் நிலவிய சீரற்ற காலநிலையால் மட்டக்களப்பு மாவட்டம் மிக மோசமாக பாதிக்கப்பட்டது. வீடுகள், விளை நிலங்கள், வீதிகள் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. வெள்ள அனர்த்தத்தின்போது உடன் உதவிகளை வழங்குவதற்கு உரிய நடவடிக்கைகளை இனிவரும் காலங்களில் முன்னெடுக்க வேண்டும்.
வெள்ளப் பெருக்கு ஏற்படுதற்கான காரணிகளை இனங்கண்டு வீதி கட்டமைப்புக்களை புனரமைக்க வேண்டும். இவ்விடயம் குறித்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க எம்முடன் தொடர்புகொண்டார். வீதி அபிவிருத்திக்கான பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
ஜனாதிபதி தனது கொள்கை பிரகடனத்தில் தகவல் தொழில்நுட்ப அபிவிருத்தி குறித்து குறிப்பிட்டிருந்தார். இலங்கையின் தகவல் தொழில்நுட்பத்தை மேம்படுத்தினால் சர்வதேச தகவல் தொழில்நுட்பத் துறையில் முன்னிலை வகிக்க முடியும்.
இலங்கையின் கல்வி கட்டமைப்பில் ஸ்டெம் (STEM) கல்வி கட்டமைப்பை அறிமுகப்படுத்த வேண்டும். இதனூடாக நாட்டில் தொழில் வாய்ப்புக்களை அதிகரித்துக் கொள்ள முடியும். தகவல் தொழில்நுட்பத்தை துரிதமாக மேம்படுத்தினால் 2030 ஆம் ஆண்டு காலப்பகுதிக்குள் 5 பில்லியன் டொலர் வருவாயை திரட்டிக் கொள்ள முடியும் என்றார்.
No comments:
Post a Comment