பலஸ்தீன மக்களின் துயரங்கள் ஏற்றுக் கொள்ள முடியாதவை என ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்க தெரிவித்துள்ளார்.
பலஸ்தீன மக்களிற்கான ஐக்கிய நாடுகளின் ஆதரவு தினத்தை குறிக்கும் விதத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
பலஸ்தீன பகுதிகளிலும் மேற்காசியாவிலும் ஒரு வருடத்துக்கு மேலாக நீடித்து வரும் பொதுமக்களின் உயிரிழப்புகளும் தொடரும் அழிவுகளும் ஏற்றுக் கொள்ள முடியாதவை சகித்துக் கொள்ள முடியாதவை என அவர் தெரிவித்துள்ளார்.
பலஸ்தீன மக்களிற்கான இலங்கையின் ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ள ஜனாதிபதி பல தசாப்தங்களாக பலஸ்தீனியர்கள் துன்பங்களை அனுபவிக்கின்றனர் என்பதை ஏற்றுக் கொண்டுள்ளார்.
பல சர்வதேச மன்றங்களில் இலங்கை காசாவின் மனிதாபிமான நிலை குறித்து ஆழ்ந்த கரிசனையை வெளியிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
உடனடி யுத்த நிறுத்தத்திற்கு இலங்கை அழைப்பு விடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பலஸ்தீனியர்களின் போராட்டத்திற்கான ஆதரவிலிருந்து இலங்கை பின்வாங்கக் கூடாது என்பதை பலஸ்தீனியர்களுக்கான ஐ.நா தினம் வெளிப்படுத்துகின்றது என தெரிவித்துள்ள அவர் சர்வதேச சட்டம் சுயநிர்ணய உரிமை அடிப்படையிலான அமைதியான சமத்துவ தீர்வை காண்பதை சர்வதேச சமூகம் கைவிடக்கூடாது எனவும் தெரிவித்துள்ளார்.
இந்த நெருக்கடி ஆபத்தான விதத்தில் தீவிரமடைந்துள்ளமையும், சர்வதேச அளவில் அதன் தாக்கமும், பலஸ்தீனர்களின் பிரச்சினைக்கு தீர்வை காண்பதற்காக ஏழு தசாப்தங்களாக மேற்கொள்ளப்படும் முயற்சிகளை மேலும் அவசியமானவையாக மாற்றியுள்ளன என அவர் தெரிவித்துள்ளார்.
பலஸ்தீனியர்களிற்கான ஐ.நாவின் நிவாரண முகவர் அமைப்பிற்கு எதிரான அச்சுறுத்தல் குறித்து கருத்து தெரிவித்துள்ள ஜனாதிபதி அகதிகளின் வாழ்வை தாங்கிப்பிடித்த மனிதாபிமான சேவை வீழ்ச்சியடையும் நிலையில் உள்ளமை ஏமாற்றமளிக்கின்றது எனவும் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment