தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த ஆழமான தாழமுக்கம் இன்று (28) அதிகாலை 2.30 மணியளவில் திருகோணமலைக்கு வடகிழக்காக சுமார் 100 கிலோ மீற்றர் தூரத்தில் நிலை கொண்டிருந்ததாக, வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
இத்தொகுதி நாட்டின் வடக்கு நோக்கியதாக வடமேற்குத் திசையில் நகர்ந்து நாட்டின் கிழக்குக் கரைக்கு அண்மையாக நகரக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக, திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
இது மேலும் வலுவடைந்து இன்று (28) ஒரு சூறாவளியாக விருத்தியடையக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் நாட்டைச் சூழவுள்ள ஆழம் கூடிய மற்றும் ஆழம் குறைந்த கடற்பரப்புகளில் மறு அறிவித்தல் வரை நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்த்துக் கொள்ளுமாறு தொடர்ந்தும் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.
இத்தொகுதியின் தாக்கம் காரணமாக, நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் தொடர்ந்தும் மேகமூட்டமான வானம் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இன்றையதினம் (28) நாட்டின் வட மாகாணத்திலும் திருகோணமலை மாவட்டத்திலும் மிகப் பலத்த மழைவீழ்ச்சியும் கடும் காற்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.
வட மாகாணத்திலும் திருகோணமலை மாவட்டத்திலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
சில இடங்களில் 150 மி.மீ. இற்கும் அதிகமான மிகப் பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.
நாட்டின் ஏனைய பிரதேசங்களில் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
வடமத்திய, வடமேல் மாகாணங்களிலும் மாத்தளை, கேகாலை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மி.மீ. இற்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.
வடக்கு, வடமத்திய, வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் மிகப் பலத்த காற்று வீசக் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
No comments:
Post a Comment