தமிழரசுக் கட்சிக்குள் தனி மனிதனின் செல்வாக்கு தீவிரமடைந்துள்ள நிலைமையால் தொடர்ந்தும் தமிழ் தேசியத்திலிருந்து விலகிச் செல்லும் தரப்புடன் பயணிக்க முடியாது என்று மாம்பழம் சின்னத்தில் போட்டியிடும் சுயேட்சைக்குழுவின் தலைமை வேட்பாளரான ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா தெரிவித்தார்.
மாவை.சோ.சேனாதிராஜாவை அவரது இல்லத்தில் வைத்து நேரில் சந்தித்து உரையாடியதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் கொழும்புக் கிளையின் தலைவராகவும், மத்திய குழுவின் அங்கத்தவராகவும் 14 ஆண்டுகளாக இருந்து வருகின்றேன்.
ஆனால், எந்தவிதமான காரணங்களும் இன்றி நியமனக் குழுவில் எனக்கு இதுவரையில் வழங்கப்பட்டு வந்த அங்கத்துவம் நீக்கப்பட்டுள்ளது.
இது சம்பந்தமாக கேள்விகளைத் தொடுத்தபோது உரிய பதில்கள் கிடைக்கவில்லை. நியமனக் குழுவில் மட்டக்களப்பில் 4 பேருக்கு அங்கத்துவம் வழங்கப்பட்டபோதும் கொழும்புக் கிளைக்கு எந்தவிதமான அங்கத்துவமும் அளிக்கப்படவில்லை.
அதேநேரம், நான் யாழ். தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடுவதற்கு விண்ணப்பித்திருந்தேன். ஆனால் யாழ். தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடுவதற்கு அனுமதி மறுக்கப்பட்ட பின்னர் திருகோணமலையில் அல்லது கொழும்பில் போட்டியிடுவதற்கு வாய்ப்பு வழங்கத் தயாராக இருப்பதாக தூது அனுப்பப்பட்டது.
இந்தச் சூழுலுக்குள் சுமந்திரன் தனக்குச் சாதகமான நியமனக் குழுவை நியமித்து வேட்பாளர்கள் பட்டியலை அறிவித்துள்ளார். குறிப்பாக யாழ். தேர்தல் வேட்பாளர் பட்டியலைப் பார்க்கின்றபோது, சுமந்திரனுக்குச் சார்பான ஆறு பேர் வேட்பாளர் பட்டியலில் இருக்கின்றனர்.
அதுமட்டுமன்றி தமிழ் அரசுக் கட்சியில் பல தடவைகள் சுட்டிக்காட்டிய விடயம்தான் நியமனக் குழுவானது தங்களைத் தாங்களே வேட்பாளர்களாக தெரிவு செய்கின்ற நிலைமை காணப்படுகின்றது. ஈது மாற்றியமைக்க்கப்பட வேண்டும் என்பதையும் சுட்டினேன்.
ஆனால் எதுவும் நடைபெறவில்லை. மூத்த தவைலர் மாவையின் பரிந்துரைகள் மதிக்கப்படவில்லை. சுமந்திரன் தனியொருவராக இந்த விடயங்களையும் தனக்குச் சாதகமாக்கியுள்ளார்.
ஆகவே சர்வாதிகாரப்போக்கு அதிகமாகயுள்ள அவ்விதமானதொரு கொள்கை தவிறிய கட்டமைப்பில் தொடர்ச்சியாக இருப்பதால் எவ்விதமான பயன்களும் இல்லை.
அதன் காரணமாகவே தேர்தலில் சுயேட்சைக் குழுவில் போட்டியிடுவதற்கு தீர்மானித்துள்ளேன். எமக்கு மாம்பழம் சின்னம் வழங்கப்பட்டுள்ளது. நாம் தமிழரசுக் கட்சியின் உண்மையான கொள்கையுடன் பயணிக்கவுள்ளோம்.
அத்துடன் மாவை சேனாதிராஜாவை நேரில் சந்தித்து உரையாடியுள்ளோம். அவர் தமிழ்த் தேசியத்துடனான எமது பயணத்துக்கு தனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார் என்றார்.
No comments:
Post a Comment