பொய்யான குற்றச்சாட்டுக்களை முடிவுக்கு கொண்டுவர உண்மையை கண்டறியும் ஆணைக்குழு அவசியம் - திலித் ஜயவீர - News View

About Us

About Us

Breaking

Sunday, September 1, 2024

பொய்யான குற்றச்சாட்டுக்களை முடிவுக்கு கொண்டுவர உண்மையை கண்டறியும் ஆணைக்குழு அவசியம் - திலித் ஜயவீர

(இராஜதுரை ஹஷான்)

இராணுவத்தினருக்கு எதிராக சர்வதேச அரங்கில் முன்னெடுக்கப்பட்டுள்ள செயற்பாடுகள் அனைத்தையும் நிராகரிக்கிறோம். இராணுவத்தினர் மீது சுமத்தப்படும் பொய்யான குற்றச்சாட்டுக்களை முடிவுக்கு கொண்டுவர உண்மையை கண்டறியும் ஆணைக்குழுவை ஸ்தாபிக்க வேண்டும் என சர்வஜன சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் திலித் ஜயவீர தெரிவித்தார்.

கொழும்பில் உள்ள சம்புத்த ஜயந்தி கேட்போர் கூடத்தில் ஞாயிற்றுக்கிழமை (01) இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது, 30 வருட கால யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்து நாட்டின் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்திய இராணுவத்தினர் நிம்மதியில்லாமல் இருக்கிறார்கள். நாட்டுக்காக உயிர் தியாகம் செய்ததால்தான் அரசியல்வாதிகள் இன்று சுதந்திரமாக மேடை போட்டு தேர்தல் பிரச்சாரம் செய்கிறார்கள்.

இராணுவத்தினர் மீது முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் அரசியல் நோக்குடையது. முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் ஏதும் இதுவரை நிறைவேற்றப்படவில்லை. ஆகவே இராணுவத்தினர் மீது முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை முடிவுக்கு கொண்டுவர வேண்டுமாயின் உண்மையை கண்டறியும் ஆணைக்குழுவை ஸ்தாபிக்க வேண்டும்.

இராணுவத்தினர் இன்று கௌரவமாக வாழவில்லை. பொருளாதார பாதிப்புக்கு மத்தியில் பல்வேறு நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்துள்ளார்கள். அரசியலமைப்பின் ஊடாக முப்படையினரது பிரச்சினைகளுக்கு தீர்வு காண்போம் என்பதையும் அரசியல் நோக்கத்துக்காக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களையும் நிராகரிப்போம்.

இராணுவத்தினரின் உரிமைகளை பாதுகாக்க அனைத்து அரசியல் தரப்பினரும் பொறுப்புடன் செயற்பட வேண்டும். தபால்மூல வாக்களிப்புக்கு தகுதிப் பெற்றுள்ள இராணுவத்தினர் நாட்டின் பாதுகாப்பு மற்றும் கௌரவம் ஆகியவற்றை கருத்திற் கொண்டு அரசியல் தீர்மானத்தை எடுக்க வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment