(எம்.ஆர்.எம்.வசீம்)
அரசாங்கம் செய்துள்ள மற்றும் முன்னெடுத்துவரும் வேலைத்திட்டங்களையே தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பகிடிவதையை இல்லாமல் செய்வதாக தெரிவிக்கப்படும் விடயத்தை நாங்கள் நம்புகிறோம் என ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஆஷு மாரசிங்க தெரிவித்தார்.
ஐக்கிய தேசிய கட்சி தலைமையகமான சிறிகொத்தவில் வெள்ளிக்கிழமை (30) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், ஜனாதிபதி வேட்பாளர்களான ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க ஆகியோர் தங்களின் தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்டுள்ளனர்.
இந்த மூன்று தேர்தல் விஞ்ஞாபனங்களையும் ஒப்பிட்டு பார்கையில், எதிர்வரும் 5 வருடங்களில் நாட்டை முன்னேற்றுவதற்கு செய்ய வேண்டிய மற்றும் செய்ய முடியுமான வேலைத்திட்டங்களை இயலும் இலங்கை எனும் தொனிப்பொருளில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெளிவாக குறிப்பிடப்பட்டிருக்கிறது
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் சகலருக்கும் வெற்றி எனும் தொனிப்பொருளில் 5 வருட திட்டம் அடங்கிய தேர்தல் விஞ்ஞாபனத்தின் வேலைத்திட்டங்கள் அனைத்தையும் தான் செய்வதாகவே சஜித் பிரேமதாச குறிப்பிட்டிருக்கிறார். அதனால் ரணில் விக்ரமசிங்கவின் தேர்தல் விஞ்ஞாபனம் தோல்வியடைந்தால் நாடு தோல்வியடைந்து வீழ்ச்சியடையும். சஜித் பிரேமதாசவின் தேர்தல் விஞ்ஞாபனம் தோல்வியடைந்தால், சஜித் பிரேமதாச தோல்வியடைந்து யால காட்டுக்கு சென்றுவிடுவார்.
அதேநேரம் அநுரகுமார திஸாநாயக்கவின் வளமான நாடு அழகான வாழ்க்கை எனும் தொனிப்பொருளில் வெளியிட்டுள்ள தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள புதிய விடயம்தான், பல்கலைக்கழகங்களில் இடம்பெறும் பகிடிவதைகளை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுப்போம் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதனை அவர்கள் செய்வார்கள். ஏனெனில் பல்கலைக்கழகங்களில் இடம்பெறும் பகிடிவதைகள் அனைத்தும் மக்கள் விடுதலை முன்னணியே மேற்கொள்கிறது. அதனால் அதனை அவர்களால் நிறுத்த முடியும் என நம்புகிறோம்.
மேலும் அவர்களின் கொள்கை பிரகனத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கும் ஏனைய விடயங்கள் பெரும்பாலும் அரசாங்கத்தினால் செய்து முடித்துள்ள வேலைத்திட்டங்கள் அல்லது அரசாங்கம் முன்னெடுக்க இருக்கும் வேலைத்திட்டங்களாகும். கல்வி தொடர்பில் தெரிவிக்கப்பட்டிருக்கும் விடயங்கள், கல்வி மறுசீரமைப்புக்காக நாங்கள் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பித்திருக்கும் விடயங்களை பிரதியிட்டே இவர்கள் வெளியிட்டுள்ளனர்.
அதேநேரம் சில விடயங்கள் ஒன்றுக்கொன்று முரண்படும் தன்மையும் காணப்படுகிறது. ஏனெனில் இந்த கொள்கை பிரகடனத்தை பல குழுக்கள் வெவ்வேறு தலைப்புகளில் தயாரித்து, பின்னர் அனைத்தையும் ஒன்றிணைத்திருப்பதாகவே தெரிகிறது.
அதனாலே அவர்களின் தேர்தல் விஞ்ஞாபனம் 200 பக்கங்களுக்கும் அதிக பக்கங்களைக் காெண்டதாக அமைந்துள்ளது. தேர்தல் விஞ்ஞாபனம் எப்போதும் எதிர்வரும் 5 வருடங்களில் செய்யப்பாேகும் வேலைத்திட்டங்களை சுருக்கமாக அனைவருக்கும் விளங்கும் வகையில் தெளிவாக தயாரிக்கப்பட வேண்டும். ஆனால் இவர்களின் தேர்தல் விஞ்ஞாபனம் மழை பெய்தால் குளம் நிறையும் என்பது போலவே இருக்கிறது.
எனவே ரணில் விக்ரமசிங்கவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் நாட்டுக்கு தற்போது செய்ய வேண்டிய வேலைத்திட்டங்களும் செய்ய முடியுமான விடயங்களுமே காணப்படுகின்றன. சஜித் பிரேமதாச, அனுரகுமார திஸாநாயக்க ஆகியோரின் தேர்தல் விஞ்ஞாபனங்களை செயற்படுத்த முற்பட்டால் நாடு வீழ்ச்சியடையும் என்றார்.
No comments:
Post a Comment