இலங்கையில் முதல் காலாண்டில் மாத்திரம் 207 எச்.ஐ.வி தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதுடன், 13 பேர் உயிரிழந்துள்ளனர். வருடாந்தம் 700 பேர் புதிய தொற்றாளர்களாக இனங்காணப்படுகிறார்கள் என சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
எச்.ஐ.வி தொற்றாளர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு 300 சதவீதமாக உயர்வடைந்துள்ளது. இந்த ஆண்டின் முதல் காலாண்டில் மாத்திரம் 207 எச்.ஐ.வி தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.
முதல் காலாண்டில் இனங்காணப்பட்ட 207 தொற்றாளர்களில் 15 வயது முதல் 24 வயதுக்குட்பட்ட 23 ஆண்களும், 05 பெண்களும் உள்ளடங்குகின்றனர்.
அத்துடன் முதல் காலாண்டில் எச்.ஐ.வி. தொற்றாளர்களில் 13 பேர் உயிரிழந்துள்ளதுடன், இலங்கையில் இதுவரையான காலப்பகுதியில் மாத்திரம் 5912 பேர் எச்.ஐ.வி. தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.
இவ்விடயம் குறித்து விசேட வைத்தியர் சமல் சஞ்ஜீவ குறிப்பிட்டதாவது, 2018 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இலங்கையில் எச்.ஐ.வி தொற்றாளர்களின் வீதம் மொத்த சனத் தொகையில் 1 மில்லியனுக்கு 0.03 வீதமாக காணப்பட்டது. ஆனால் தற்போது அந்த வீதம் 0.1 ஆக உயர்வடைந்துள்ளது. அதாவது நூற்றுக்கு 300 சதவீதமளவில் தொற்றாளர்களின் வீதம் உயர்வடைந்துள்ளது. இதனை அலட்சியப்படுத்த முடியாது.
வருடாந்தம் சுமார் 700 பேர் புதிய தொற்றாளர்களாக அடையாளப்படுத்தப்படுகிறார்கள். பாலியல் தொழில்களில் ஈடுபடுபவர்களின் மத்தியில் எச்.ஐ.வி தொற்று பரவல் அதிகரித்துள்ளதை அவதானிக்க முடிகிறது.
மேல் மாகாணத்தில் எச்.ஐ.வி தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகளவில் காணப்படுகிறது என்றார்.
தேசிய பால்வினை நோய்கள் மற்றும் எய்ட்ஸ் கட்டுப்பாட்டுத் திட்டத்தின் பணிப்பாளர் வைத்தியர் வினோ தர்மகுலசிங்க தெரிவித்துள்ளதாவது, 2018 ஆம் ஆண்டிலிருந்து எச்.ஐ.வி தொற்றாளர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது.
பரிசோதனை திறன் விரிவாக்கம், பாலியல் கல்வி மற்றும் ஆபத்தான பாலுறவு நடத்தை குறித்து மக்களிடையே கல்வி அறிவு இன்மை அறிவு மற்றும் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்காதது தொற்றாளர்கள் அதிகரிப்பிற்கு காரணம் என குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment