ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி பயணித்த ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளாகியுள்ளதாக அந்நாட்டு அரசு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி பயணித்த ஹெலிகொப்டர் ஞாயிற்றுக்கிழமை தரையில் மோதியதாக அரசு ஊடகம் கூறுகிறது.
ஈரான் வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமிரப்துல்லாஹியனும் அந்த ஹெலிகொப்டரில் இருந்ததாக கூறப்படுகிறது.
மோசமான வானிலை காரணமாக மீட்புப் படையினர் அந்த இடத்தை அடைவதில் சிக்கல் நீடிப்பதாக ஈரான் உள்துறை அமைச்சர் அஹ்மத் வாஹிதி கூறினார்.
ஹெலிகொப்டரில் பயணித்தவர்களின் நிலை என்னவென்று தெரியவில்லை, இன்னும் எந்த தொடர்பும் இல்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடும் பனிமூட்டம் - மீட்புப் பணியில் சிக்கல்
கடும் பனிமூட்டம் காரணமாக மீட்புப் பணிகளில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக மீட்புக் குழுவினருடன் இருந்த ஃபார்ஸ் நியூஸ் ஊடகத்தின் செய்தியாளர் தெரிவித்தார்.
அவரது கூற்றுப்படி, மலை மற்றும் மரங்கள் நிறைந்த அந்த பகுதியில் 5 மீட்டர் தொலைவு வரை மட்டுமே வெறும் கண்களால் பார்க்க முடிகிறது. உள்ளது.
அவசரகால மீட்புக் குழுவினருடன் இருக்கும் ஃபார்ஸ் செய்தி நிறுவனத்தின் செய்தியாளர், தற்போதைய நிலைமைகளின் அடிப்படையில் விமானத்தை கண்டுபிடிப்பது கடினம் என்று கூறுகிறார்.
ஈரான் - அஜர்பைஜான் எல்லையில் கிஸ் கலாசி மற்றும் கோடாஃபரின் அணைகளைத் திறக்கும் நிகழ்ச்சியில் அஜர்பைஜான் ஜனாதிபதி இலாம் அலியேவுடன் ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி பங்கேற்று விட்டு திரும்பும் வழியில் இந்த விபத்து நேரிட்டுள்ளது.
ஈரானின் வடகிழக்கு நகரான தப்ரிஸுக்குச் சென்று கொண்டிருந்த போது 50 கிலோமீட்டர் முன்னதாக வர்செகான் நகருக்கு அருகே அவர் பயணித்த ஹெலிகொப்டர் தரையில் மோதியுள்ளது.
விபத்துக்குள்ளான ஹெலிகொப்டர் எங்கே?
"பல்வேறு மீட்புக் குழுக்கள்" ஹெலிகொப்டரை இன்னும் தேடி வருவதாக ஈரானின் உள்துறை அமைச்சர் அஹ்மத் வஹிடி தெரிவித்துள்ளார்.
ஈரானிய அரசு தொலைக்காட்சியில் பேசிய வஹிடி, "மோசமான வானிலை மற்றும் அப்பகுதியில் நிலவும் மூடுபனி" காரணமாக விபத்து நடந்த இடத்தை மீட்புக்குழு அடைய "நேரம்" ஆகும் என்று கூறுகிறார்.
"அனைத்தும் கட்டுக்குள் இருக்கிறது. மீட்புக் குழுக்கள் தங்கள் பணியைச் செய்து வருகின்றன. கூடிய விரைவில் மீட்புப் பணி நிறைவடையும் என்று நாங்கள் நம்புகிறோம்," என்று அவர் மேலும் கூறினார்.
ஈரானின் அவசர சேவைப்பிரிவு அளித்துள்ள தகவலின்படி, சம்பவ இடத்திற்கு 8 அம்புலன்ஸ்கள் அனுப்பப்பட்டுள்ளன. ஆனால் மோசமான வானிலை காரணமாக, மீட்புக்குழு சிரமங்களை எதிர்கொண்டுள்ளது.
மீட்புக்குழுவில் 3 பேரை காணவில்லை
விபத்துக்குள்ளான ஹெலிகொப்டரைத் தேடும் பணியில் ஈடுபட்டிருந்த மீட்புப் பணியாளர்கள் 3 பேர் காணாமல் போய்விட்டதாக ரெட் கிரசண்ட் அமைப்பின் செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.
தேடுதல் குழுக்கள் ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளான இடத்திற்கு அருகில் இருப்பதாக அவர் தெரிவித்தார்.
வானிலை விரைவில் "கடுமையான குளிராக" இருக்கும், மழையும் வரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுவதால், தேடுதல் பணி இன்னும் தாமதமாகும் என்று அவர் கூறியுள்ளார்.
ஈரான் அதிபருக்காக பிரார்த்திக்க வேண்டுகோள்
ஈரானின் அரசு தொடர்பு செய்தி நிறுவனமான ஃபார்ஸ் செய்தி நிறுவனம், ஜனாதிபதி இப்ராஹிம் ரைசிக்காக பிரார்த்தனை செய்யுமாறு ஈரானியர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.
அவர் பயணம் செய்த வாகனத் தொகுதியில் இடம்பெற்றிருந்த ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளானதாக செய்திகள் வெளியான நிலையில் அந்த நிறுவனம் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளது.
மஷாத் என்ற நகரில் ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி நலமாக இருக்க வேண்டி பலரும் பிரார்த்தனை செய்வதைக் காட்டும் காட்சிகளும் அரசு தொலைக்காட்சியில் வெளியாகியுள்ளன.
அஜர்பைஜான் 'ஆழ்ந்த' கவலை
இப்ராஹிம் ரைசி ஹெலிகொப்டர் விபத்து பற்றிய செய்திகளைக் கேட்டதும், தான் "ஆழ்ந்த கவலை" அடைந்ததாக அஜர்பைஜான் ஜனாதிபதி இலாம் அலியேவ் கூறியுள்ளார்.
ஈரான் - அஜர்பைஜான் எல்லையில் இரண்டு அணைகளைத் திறக்கும் நிகழ்ச்சியில் இப்ராஹிம் ரைசியுடன் அலியேவும் உடனிருந்தார்.
"இன்று, ஈரான் இஸ்லாமியக் குடியரசின் தலைவர் இப்ராஹிம் ரைசிக்கு நட்பு ரீதியில் விடை கொடுத்தேன். அதன் பிறகு ஈரான் உயர்மட்டக்குழுவை ஏற்றிச்சென்ற ஹெலிகொப்டர் தரையில் மோதியது என்ற செய்தியால் நாங்கள் மிகவும் கவலையடைந்தோம்" என்று அவர் தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
மீட்புப் பணிக்கு தேவையான எந்த உதவியையும் வழங்க அஜர்பைஜான் தயாராக இருப்பதாக அவர் மேலும் கூறியுள்ளார்.
யார் இந்த இப்ராஹிம் ரைசி?
இப்ராஹிம் ரைசி தீவிர பழமைவாத அரசியல் கருத்துகளைக் கொண்டவராக கருதப்படுகிறார்.
63 வயதான ரைசி, 25 வயதில் ஈரான் தலைநகர் தெஹ்ரானில் துணை வழக்கறிஞரானார்.
2014ஆம் ஆண்டில் ஈரானின் வழக்கறிஞர் ஜெனரலாக நியமிக்கப்படுவதற்கு முன்பு, அவர் அரசு வழக்கறிஞராகவும், பின்னர் மாநில இன்ஸ்பெக்டரேட் அமைப்பின் தலைவராகவும், நீதித்துறையின் முதல் துணைத் தலைவராகவும் பணியாற்றினார்.
இப்ராஹிம் ரைசி 2017ஆம் ஆண்டில் முதல் முறையாக ஜனாதிபதி பதவிக்கு போட்டியிட்டு அரசியல் பார்வையாளர்களை ஆச்சரியப்படுத்தினார். அந்த தேர்தலில் அவர் இரண்டாவது இடத்தைப் பிடித்தார்.
2019 ஆம் ஆண்டில், ஆயதுல்லா காமனெயி அவரை நீதித்துறையின் சக்தி வாய்ந்த பதவிக்கு நியமித்தார்.
அவர் ஜூன் 2021 இல் ஈரான் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
No comments:
Post a Comment