இலங்கை வரும் ஈரானிய ஜனாதிபதி உமா ஓயா பல்நோக்குத் திட்டத்தைத் திறந்து வைத்து நாட்டிலிருந்து புறப்பட உத்தேசம் - News View

About Us

About Us

Breaking

Tuesday, April 23, 2024

இலங்கை வரும் ஈரானிய ஜனாதிபதி உமா ஓயா பல்நோக்குத் திட்டத்தைத் திறந்து வைத்து நாட்டிலிருந்து புறப்பட உத்தேசம்

(நா.தனுஜா)

ஈரானிய ஜனாதிபதி இப்ராஹிம் ரெய்ஸி ஒருநாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு புதன்கிழமை (24) பிற்பகல் 2.00 மணிக்கு இலங்கையை வந்தடையவுள்ளார்.

ஈரானின் ஒத்துழைப்புடன் 529 மில்லியன் டொலர் பெறுமதியில் முன்னெடுக்கப்பட்டிருக்கும் உமா ஓயா பல்நோக்குத் திட்டத்தைத் திறந்து வைப்பதே ஈரானிய ஜனாதிபதியின் இலங்கைக்கான விஜயத்தின் நோக்கமாகும்.

உமா ஓயா பல்நோக்குத் திட்டம் 2011 ஆம் ஆண்டு ஈரானின் ஏற்றுமதி மேம்பாட்டு வங்கியின் கடனுதவியுடன் ஆரம்பிக்கப்பட்டது. இருப்பினும் அதனைத் தொடர்ந்து பூகோள அரசியல், பொருளாதாரத் தடைகள் ஈரானில் தாக்கங்களை ஏற்படுத்தியதன் விளைவாக, உமா ஓயா திட்டத்துக்கான நிதி உள்நாட்டு திறைசேரி ஒதுக்கீடுகளுக்கு மாற்றப்பட்டது.

இத்திட்டத்தின் கீழ் புஹல்பொல நீர்த் தேக்கத்திலிருந்து சேகரிக்கப்படும் நீர், 4 கிலோ மீற்றர் சுரங்கப்பாதையின் ஊடாக டயரபா நீர்த் தேக்கத்துக்குச் செல்கிறது. அங்கிருந்து 15.5 கிலோ மீற்றர் சுரங்கப்பாதை ஊடாக எல்ல, கரந்தகொல்ல பகுதியில் உள்ள 2 நிலத்தடி விசையாழிகளுக்குச் செல்கிறது.

இவ்விசையாழிகள் ஒவ்வொன்றும் 60 மெகாவோட் மின்சாரத்தை உற்பத்தி செய்வதுடன், அவை தேசிய மின்கட்டமைப்பில் இணைத்துக் கொள்ளப்படும்.

அதன்படி இத்திட்டத்தைத் திறந்து வைப்பதற்காக இலங்கைக்கு வருகைதரவிருக்கும் ஈரானிய ஜனாதிபதி இப்ராஹிம் ரெய்ஸி நாளை புதன்கிழமை பிற்பகல் 2.00 மணிக்கு கொழும்பு கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக நாட்டை வந்தடைவார் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்தோடு உமா ஓயா திட்டத்தைத் திறந்து வைத்தன் பின்னர், அன்றையதினமே அவர் நாட்டிலிருந்து புறப்படுவார் எனவும் அறியமுடிகின்றது.

அதேவேளை ஈரானிய ஜனாதிபதியின் இலங்கை விஜயம் தொடர்பில் கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரக அதிகாரிகள் வெளிவிவகார அமைச்சிடம் தமது அதிருப்தியை வெளிப்படுத்தியதாக செய்திகள் வெளியாகியிருந்த போதிலும், அமெரிக்கத் தூதரகம் அதனை மறுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment